அரசு வேலைக்காக காத்திருப்போரில் தமிழகம் முதலிடம்- அதிமுக அரசு பாராட்டு விழா நடத்தலாம்: கருணாநிதி
சென்னை: அரசு வேலையில் சேர காத்திருப்போரில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், இதற்காக அதிமுக அரசு கவலை படுவதாகத் தெரியவில்லை. எனவே இதற்காகவும் அதிமுக அரசு பாராட்டு விழா நடத்திக் கொள்ளலாம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது யார்? என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கேள்வி:- அரசு வேலையிலே சேருவதற்காக, பதிவு செய்துகொண்டு, காத்திருப்போர் பட்டியலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதல் இடத்திலே இருக்கிறது என்று கூறப்படுகிறதே?
கலைஞர்:- வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொண்டு, அரசு வேலைக்காகக் காத்திருப்போர் பட்டியல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், நாடு முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் நான்கு கோடியே 47 இலட்சம் பேர்.
மாநிலவாரியாக காத்திருப்போர் பற்றிய புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, மற்ற மாநிலங்களையெல்லாம்விட, தமிழகத்தில்தான் அதிகப்பட்சமாக 77 இலட்சம் பேர் என்ற வகையில் முதல் இடம் வகிக்கிறது. மேற்கு வங்கம் இரண்டாவது இடத்திலும், உத்தரப்பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அ.தி.மு.க. அரசு இத்தனை இடங்கள் காலியாக உள்ளதே என்பதைப் பற்றி எந்தக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. தி.மு.கழக ஆட்சியில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 66 இலட்சம் என்றிருந்தது. தற்போது 77 இலட்சம் பேராக உயர்ந்துள்ளது. அதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது, அரசுப் பணிகளில் நியமனத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
கழக ஆட்சியில் அந்தத் தடை நீக்கப்பட்டதன் விளைவாக 1 இலட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொண்டவர்கள், பணி நியமனம் பெற்றார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில், அரசுப் பணிகளில் சேர இருந்த உச்ச வயது வரம்பு மேலும் 5 ஆண்டு களுக்குத் தளர்த்தப்பட்டது.
மேலும் கழக ஆட்சியில், அரசுப் பணிகளில் இதுவரை காணாத அளவுக்கு பணி வாய்ப்பினை வேலை வாய்ப்புத் துறை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் மூலமாக 5 இலட்சத்து 5 ஆயிரத்து 200 பேர் பணி வாய்ப்பினைப் பெற்றார்கள்.
மேலும் கழக ஆட்சியில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுகளை புதுப்பிக்காதவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கப் பட்டதன் காரணமாக 4 இலட்சத்து 96 ஆயிரத்து 877 பதிவுதாரர்கள் பயன் பெற்றார்கள். மேலும் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் பதிவு செய்துகொண்டு, ஐந்தாண்டுகளுக்கு அவர்களுக்கு வேலை கிடைக்காவிட்டால், மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலமாக மட்டும் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 801 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற்றார்கள்.
இதெல்லாம் கழக ஆட்சி செய்த சாதனைகள். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டிருப்போரின் எண்ணிக்கையை 77 இலட்சமாக உயர்த்தி, அகில இந்தியாவில் முதல் இடத்திற்குக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களே, இது, அ.தி.மு.க. அரசு நமக்குத் தந்துள்ள வேதனை. இதற்காகவும் ஒரு பாராட்டு விழாவினை நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.