ஆடி அமாவாசை - சதுரகிரியில் குவியும் பக்தர்கள்; பாதுகாப்பு தீவிரம்
வத்திராயிருப்பு: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க ஏராளமாக குவிந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகேயுள்ளது வத்திராயிருப்பு. இது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. ஆடி அமாவாசயை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதி முதல் கோயிலுக்கு சென்று வர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் மாலை 6 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று அதிகாலை 4 மணி முதலே தாணிப்பாறையில ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.
காலை 5.15 மணிக்கு வனத்துறை செக்போஸ்ட் அருகே உள்ள கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் வரிசையாக மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆடி அமாவாசை நாளான இன்று காலை சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெறும்.
மேலும் சுந்தரமூர்த்தி, சந்தனமகாலிங்கம், பிலாவடி கருப்பசாமி, 18 சித்தர்களுக்கும் சிறப்பு பூஜை நடக்கும். இதை முன்னிட்டு மதுரை எஸ்பி விஜேயந்திரபிதாரி தலைமையில் விருதுநகர் ஏ.டி.எஸ்.பி மாடசாமி, டி.ஆர். ஓ முத்துகுமார், டி.எஸ்.பிக்கள் வெள்ளையன், சக்கரவர்த்தி, சங்கரேஸ்வரன், தாசில்தார் அன்னம்மாள் ஆகியோர் வனத்துறை வளைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கவிக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அன்னதானத்தில் வழங்கப்படும் உணவு மற்றும் கடைகளில் விற்கப்படும் பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர். மதுரை, திருவில்லிபுத்தூர்,விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி உளளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். வண்டிபனை, தாணிப்பாறை, சங்கிலிபாறை பகுதியில் தீயணைப்பு துறையினரும், சுகாதார துறையினரும் முகாமிட்டுள்ளனர்.
இதே போன்று கன்னியாகுமரியிலும் ஆடி அமாவாசைய முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி அளிக்க ஏராளமானோர் குவிந்துள்ளனர்.