கந்து வட்டிக் கொடுமையால் கயிற்றில் தொங்கும் கரூர் மக்கள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
கரூர்: கரூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கந்து வட்டிக் கொடுமை குறித்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் ,ஈரோடு, கோவை போலவே கரூரும் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
இங்கு உலகம் முழுவதும் வர்த்தகத்தை கொண்டுள்ள ஜவுளி தொழில், இதே அளவுக்கு புகழ் பெற்று விளங்கும் கொசுவலை மற்றும் பஸ் பாடி நிறுவனங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்து அன்றாட வேலைக்கு சென்று வருகின்றனர்.

ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள்:
கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமின்றி ஈரோடு, வேலூர் , மோகனூர், குளித்தலை , ஈசநத்தம் போன்ற பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மற்றும் பேருந்துகளிலும், நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களிலும் வந்து பணியாற்றி செல்கின்றனர்.

குறிவைக்கும் கந்துவட்டி:
தாந்தோணிமலை , ராயனூர், வடிவேல் நகர், இனாம் நகர், வெங்கமேடு , பசுபதிபாளையம், காந்திகிராமம் போன்ற பகுதிகளை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை குறி வைத்து தான் கரூரில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது.

வாராவாரம் வசூல் மழை:
தின வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகைகளில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் பணியில் இங்கு நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று பணம் கொடுத்து வார வாரம் வசூல் செய்து வருகின்றனர்.

அவசர தேவையால் அவதி:
கரூர் நகரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பைனான்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும் போதிய ஆவணங்கள் இன்றி பணம் கிடைப்பது சிரமம் என்பதால் அவசர தேவைக்கு கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருவதாக பரவலாக கூறப்படுகிறது.

மீட்டர் வட்டி, எக்ஸ்பிரஸ் வட்டி:
இதிலும் மீட்டர் வட்டி , எக்ஸ்பிரஸ் வட்டி என்ற கணக்கில் நாள் கணக்கிலும், மணிக்கணக்கிலும் பணம் வழங்கும் சிலரால் பொது மக்கள் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

பண்டிகை காலங்களால் பாதிப்பு:
இது குறித்து சமூக ஆர்வலர் வைகை ரவி கூறுகையில், "ஆண்டு தோறும் பள்ளி திறக்கும் சமயங்கள், பண்டிகை காலங்கள், திருவிழா போன்ற சமயங்களில் அவசரத் தேவைக்காக வட்டிக்கு பணம் பெற்றுக் கொண்டு திரும்பி கட்ட முடியாமல் தினமும் ஏராளமான பொது மக்கள் கரூர் பகுதியில் அவதிப்பட்டு வருகின்றனர்.

பேராசையால் பெரு நஷ்டம்:
இது தவிர அவசரத் தேவைக்காகவும், முதல் போட்டு பெரிய அளவில் சம்பாதித்து விடலாம் என்ற பேராசையால் அதிகளவு தொகையை வட்டிக்கு பெற்றுக் கொண்டு தொழில் சரியாக நடத்த முடியாமல் தற்கொலைக்கு செல்லும் அளவுக்கு கரூரில் பல்வேறு குடும்பத்தினர்களின் நிலைமை இருந்து வருகிறது.

அதிகரிக்கும் தற்கொலைகள்:
கரூர் நகரில் கடனை திருப்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

போதிய விழிப்புணர்வு அவசியம்:
எனவே கந்து வட்டி கொடுமையில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்றும் வகையில் சம்பந்தப்பட்ட போலீசார் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications