அப்துல் கலாம்.. நல்லவர்.. வல்லவர்.. கனவு கண்டவர்.. ஒப்புக்கு சப்பாக புகழாரம் சூட்டிய மோடி
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் மணி மண்டப திறப்பு விழாவில் அவரது அருமை பெருமைகளைப் பற்றி பேசாமல் மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பற்றியே பிரதமர் மோடி அதிகமாக பேசியது பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
ஏழ்மை நிலையில் இருந்து இந்தியாவின் உயரிய பதவியான ஜனாதிபதி என்கிற நிலைக்கு உயர்ந்த மக்களின் நேசத்துக்குரிய மகத்தான மாமனிதர் அப்துல்கலாம். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையும் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் பாடம்.
'கனவு காணுங்கள்' என்ற ஒற்றை சொல்லில் கோடானு கோடி உள்ளங்களில் நம்பிக்கை விதையை விதைத்துவிட்டுப் போனவர்.. உலகை மிரட்டும் அணு ஆயுதமாம் அக்னி ஏவுகணையை உருவாக்கிய நாயகன். கடைசி மூச்சுகூட ஷில்லாங் மாணவர்களிடையேதான் பிரிந்தது.
2 ஆண்டுக்குப் பின்னர்...
அத்தகைய மகத்தான மாமனிதர் மறைந்து 2 ஆண்டுகள் கழித்துதான் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டிருக்கிறது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டார்.
|
ஏமாற்றம்
அத்துடன் கலாம் அவர்களின் எளிமை, நேர்மை, அறிவுத்திறன் இவைபற்றியெல்லாம் விவரித்து மோடி பேசுவார் என எதிர்பார்த்தவர்களை பெரும் ஏமாற்றமடையச் செய்துவிட்டார். ஆங்காங்கே ஒப்புக்கு சப்பாக அப்துல்கலாமுக்கு அடைமொழிகள் கொடுத்துவிட்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தம்பட்டம் அடித்து கொண்டே பேசி முடித்துவிட்டார்.
மேற்கோள் எதுவும் இல்லை
அப்துல் கலாம் கனவு கண்டார்; சிறந்தவர்; வல்லவர்; நல்லவர் என மானே தேனே போட்டுக் கோ பாணியில் பேசிவிட்டு பிரதமர் மோடி முடித்தது அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. அப்துல்கலாமின் மேற்கோள்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அதில் ஒன்றைக் கூட மேற்கோள் காட்டவும் இல்லை.
கடனுக்கு...
அப்துல்கலாமுக்கு ஏதோ கடமைக்கு மணிமண்டபம் கட்டி முடித்துவிட்டோம் என நினைத்துவிட்டார் போல பிரதமர் மோடி!