நேபாளக் கோவிலில் கால்நடை பலி கொடுப்பதை தடை செய்யக் கோரி சென்னையில் உண்ணாவிரதம்
சென்னை: நேபாள நாட்டில் உள்ள காதிமை கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் கால்நடைகளைப் பலி கொடுக்கும் விழாவைத் தடை செய்யக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
கால்நடைகளுக்கான மனிதர்கள் என்ற அமைப்பின் இந்தியக் கிளை சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது.
வள்ளுவர் கோட்டம் அருகே, காலை 9 மணிக்குத் தொடங்கியது இந்தப் போராட்டம்.
நேபாள காதிமை திருவிழா:
காதிமை என்பது 5 வருடத்திற்கு ஒரு முறை நேபாளத்தில் உள்ள காதிமை கோவிலில் ஒரு மாத காலத்திற்கு நடத்தப்படும் மிகப் பெரும் இந்து திருவிழாவாகும்.
கால்நடைகள் பலி:
இது கால்நடைகளை பலிகொடுப்பதில் உலகின் 3ஆவது மிகப் பெரிய திருவிழாவாகும்.
250 வருடம் பழமையான விழா:
காதிமை 250 வருடம் பழமைப்பெற்ற திருவிழாவாகும். நவம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு, 250000 விலங்குகளுக்கு மேல் பலிகொடுக்கப்பட்டு நடைபெற்ற இத்திருவிழா பல மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கொடூர செயலுக்கு கண்டனம்:
உலகம் முழுவதும் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் இந்த கொடூர செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நேபாள அரசால் நிதி:
இத்திருவிழாவிற்கு தேவையான நிதி அனைத்தும் நேபாள அரசால் வழங்கப்படுகிறது. மற்ற வருடத்தை காட்டிலும் இந்த வருடம் இத்திருவிழாவை, மிக பிரம்மாண்டமாக நடத்தப்போவதாக காதிமை திருவிழா தலைமைக்குழு அறிவித்துள்ளது.
சட்ட விரோத கடத்தல்:
இத்திருவிழாவில் பலி கொடுக்கப்படும் கால்நடைகள் பலவும் இந்திய மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் சட்டவிரோதமாக கடத்தப்படுபவை.
கையெழுத்துப் பிரச்சாரம்:
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மேலும் காதிமைக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரத்தையும் மேற்க்கொண்டது.
பிரதமருக்கு அனுப்புதல்:
அது இந்திய பிரதமர், துணைப்பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் ஆதரவு:
நடந்து முடிந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டு காதிமைக்கு எதிரான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
முக்கிய பிரமுகர்கள்:
அதில், சுசித்ரா (பின்னணி பாடகி), சௌந்தர்யா (பின்னணி பாடகி), தேஜஸ்வினி (நடிகர் -கட்டட கலை நிபுணர்), அலிஷா அப்துல்லா (ரேசர் -நடிகர்), ஹூசைனி (கராத்தே- வில்வித்தை நிபுணர்) மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.