தமிழ்நாட்டுடன் திருப்பதி... கேரளத்துடன் குமரி: மீண்டும் வாயை விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்!
விருதுநகர்: குமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்க நாங்களே முன் நின்று போராடுவோம் என்று மீண்டும் சர்ச்சைக்கிடமாக பேசியுள்ளார் மத்திய கனரக தொழில் மற்றும் பொது தொழில் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக பொன். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை சிவகாசி வந்தார்.
அவரை வரவேற்ற தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இந்தியாவில் சீனப் பட்டாசுகள் ஊடுருவலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
குமரி பிரிந்திருக்காது
இந்துக்கள் ஒன்றுபட்டு சிறுபான்மையினருடன் ஒற்றுமைப்பட்டிருந்தால் கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தில் இருந்து பிரிந்திருக்காது.
பாஜக போராடும்
திருப்பதியும் தமிழகத்துக்கு வந்திருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்க நாங்களே முன்னின்று போராடுவோம். தமிழர் பிரச்சினைகள் பற்றி விவாதம் செய்பவர்களைவிட எங்களுக்கு தமிழ்ப்பற்று உள்ளது.
இந்தியப் பொருட்கள்
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகை ஆள வேண்டும் என்னும் சிந்தனையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தயாரிக்க முடியாத பொருட்களை அயல் நாட்டினர் தயாரிக்க முன் வந்தால் அவர்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.
சீனப்பட்டாசுகள்
சீனப் பட்டாசுகள் இந்தியாவை ஆளுகின்ற வகையில் அனுமதிக்க மாட்டோம். பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படாது என்ற நம்பிக்கை உள்ளது.
விசைப்படகுகளை மீட்க
இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ள விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
சுப்ரமணிசுவாமிக்கு குட்டு
இந்நிலையில் இந்த செய்திகுறித்து சுப்பிரமணியன் சுவாமி உட்பட யாரும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்தால் அது இந்திய அரசை அவமதிப்பதாகவே அர்த்தம் ஆகும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் கண்டனம்
இதனிடையே குமரி மாவட்டம் குறித்து தாம் பேசிய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
100 நாள் சாதனை
மேலும் இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மோடியின் 100 நாள் சாதனைகளை கண்டு உலகம் வியப்பதாகவும் குறிப்பிட்டார்.
சர்ச்சையை கிளப்பிய பேச்சு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று கூறியதாக சர்ச்சை வெடித்தது.