மன்னார்குடியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பா? கொந்தளிப்பில் டிடிவி தினகரன்
மன்னார்குடியில் கூட்டம் நடத்த தினகரன் ஆதரவாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், முதல்வர் மீது தினகரன் கடும் கொந்தளிப்பில் இருக்கிறாராம்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சைலன்ட் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்து அதிரடி காட்டிய தினகரனுக்கு, பலத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார் முதல்வர்.
தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை வைத்தது ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் தரப்பு. அதனை ஏற்றுக்கொண்டார் தினகரன்.
அந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றார் என்று புகார் எழுந்த நிலையில், அவரைக் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது டெல்லி போலீஸ்.
பல வாரங்கள் கடந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் டெல்லி சிறையிலிருந்து சென்னை திரும்பினார் தினகரன். அதனையடுத்து மீண்டும் பழையபடியே தீவிர அரசியல் செய்யப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
அதோடு, தினகரன் மத்திய அரசால் பொய் வழக்கில் பழிவாங்கப்படுகிறார் என, அவரது ஆதரவாளர்களான பெங்களூரு புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோரை விட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பொதுக்கூட்டம் நடத்த தினகரன் 'கட்டளையிட்டுள்ளார்'.
மன்னார்குடியில் அனுமதியில்லை
மதுரை உள்ளிட்ட சில ஊர்களில் கடந்த சில வாரங்களாகப் பொதுக்கூட்டம் நடத்திய புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர், நேற்று மன்னார்குடியிலும் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். கடைசி நேரத்தில் கூட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது போலீஸ்.
முதல்வர்மீது அதிருப்தி
இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் தினகரன் தரப்பினர். விஷயத்தைக் கேள்விப்பட்ட தினகரனும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எகிறிய எடப்பாடி
இது தொடர்பாக, போலீசுக்கு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கும் முதல்வர் பழனிச்சாமி, இப்படி ஆளாளுக்கு பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்க அனுமதிக்க முடியாது. மீறி கூட்டம் நடத்த வேண்டும் என்றால், கோர்ட் அனுமதி பெற்று வந்து, அதன் அடிப்படையில் நடத்தட்டும். இனி தமிழ்நாட்டில் எந்த ஊரில் தினகரன் பெயரைச் சொல்லி கூட்டம் நடத்த முயன்றாலும் இது தான் அரசின் நிலைப்பாடு என்று கொந்தளித்துள்ளார்.
போராட்டம் நடத்த விரும்பிய தினகரன்
அதன் அடிப்படையில், போலீசார் அனுமதி மறுக்க, தினகரன், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் போன் செய்து, தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், போராட்டம் நடத்தி அரசுக்கு பதிலடிகொடுக்க யாருமே முன் வரவில்லை. இதனால் தினகரன் ரொம்பவே நொந்துபோயுள்ளார் என்கிறார்கள்.