புகார்கள் எதிரொலி... முண்டந்துறை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
நெல்லை: முண்டந்துறை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வந்ததால் அவற்றினை பொதுமக்கள் துணையோடு வனத்துறையினர் அகற்றினர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே முண்டந்துறை வனப்பகுதியில் அமைந்துள்ளது கரையார் சொரிமுத்து அய்யனார் கோயில். இங்கு கடந்த 14ம் தேதி முதல் ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இபபகுதி புலிகள் காப்பக பகுதியாக இருப்பதால் வனதுறையினர் இங்கு வரும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
மேலும் பாபநாசம் மற்றும் முண்டந்துறை சோதனை சாவடி, முண்டந்துறை வன அலுவலகம், எஸ்எம் கோயில் பீட் ஆகிய 4 இடங்களில் பக்தர்களிடம் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆனால் இதையெல்லாம் மீறி கோயில் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன.
வனத்துறையினர் இவற்றை அகற்றாததால் வன விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு வருகின்றன என்றும் இதனால் அவற்றின் உயிருக்கு ஆபதது ஏற்படும் என்றும் வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர் உடனடியாக அங்கு குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அ்ப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்களின் துணையோடு இணைந்து வனப் பகுதியில் பொதுமக்களால் போடப்பட்ட பாலிதீன் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனவிலங்குகளின் உயிரை காப்பாற்றும் பணியில் பொதுமக்களும், வனத்துறையினரோடு இணைந்து இந்தப் பணியை தொடங்கியுள்ளதால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.