தினக்கூலி ரூ.100ஐ வைத்து குடும்பம் நடத்த முடியல: கலெக்டரிடம் பெண் துப்புரவு தொழிலாளர்கள் மனு
திண்டுக்கல்: தினக்கூலியாக ரூ.100 அளிப்பது போதவில்லை என்று கூறி ஊதியத்தை உயர்த்திக் கொடுக்குமாறு துப்புரவு தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கன்னிவாடி பேரூராட்சியில் துப்புரவு பணி செய்யும் 20 பெண்கள் கூட்டத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
நாங்கள் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பகுதி நேர துப்புரவு தொழிலாளர்களாக பணியில் சேர்க்கப்பட்டோம். அப்போது தினக்கூலியாக ரூ.30 கொடுத்தார்கள். தற்போது முழு நேர தொழிலாளர்களாக பணி செய்து வருகிறோம். வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து, அவற்றை 11 வகையாக பிரித்து கொடுக்கிறோம். இதற்கு தினமும் ரூ.100 கூலி கொடுக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் இந்த சம்பளம் போதுமானதாக இல்லை. இதனால் குடும்பம் நடத்துவதில் எங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே எங்களை பணிநிரந்தரம் செய்வதோடு, சம்பளத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.