இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க முற்போக்கு சக்திகள் திரள வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
சென்னை: இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க முற்போக்கு சக்திகள் ஒன்று திரளவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், "இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 21 பேர் தங்களின் விருதுகளை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள்.
கன்னட எழுத்தாளரும், பகுத்தறிவு சிந்தனையாளருமான கல்புர்கி படுகொலை செய்யப்பட்டதையும், இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும் கண்டித்து தான் அவர்கள் இந்நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் இந்த விஷயத்தில் தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். எரிமலை வெடிப்பதற்கு முன் வெளியேறும் சாம்பல், வெப்பக்காற்றை போன்றவை என்பதை அரசு உணர வேண்டும். எழுத்தாளர் சமுதாயம் ஒரு விஷயத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தால் அதை பெரும் அவமானமாக கருத வேண்டும்.
மதச்சார்பின்மையின் அடையாளமாக பார்க்கப்படும் இந்தியாவில் இப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் நாட்டை மத மோதல்களுக்கு அழைத்துச் செல்லும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. எனவே, இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க முற்போக்கு சக்திகள் ஒன்று திரளவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.