கண்டு கொள்ளாத அரசு... சாலை போட ஜல்லியுடன் களம் குதித்த மக்கள்... வேகமாக வந்து கைது செய்த போலீஸ்
சென்னை: சென்னை கோயம்பேடு - வானகரம் இடையே படு மோசமாக உள்ள சாலையை செப்பனிடாமல் மாநில அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் வெறுப்படைந்து, கோபாவேசத்துடன், ஜல்லி சகிதம் சாலை போட மக்களே களம் இறங்கினர். ஆனால் போலீஸார் மின்னல் வேகத்தில் வந்து இந்த சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தியதோடு பொதுமக்களையும் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து அப்புறப்படுத்தினர். இவர்களை விட வேகமாக விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகளோ ஜல்லி உள்ளிட்டவற்றை படு வேகமாக அப்புறப்படுத்தினர்.
சென்னை கோயம்பேடு முதல் வானகரம் இடையிலான சாலை படு மோசமாக உள்ளது. நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்கு படு கேவலமாக உள்ள சாலை இது.
இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது சகஜம். இதை சரி செய்யக் கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. இதையடுத்து நாங்களே சாலை போடப் போகிறோம் என மக்கள் அறிவித்தனர். அவர்களுக்கு மதுரவாயல் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு இயக்கம், மதுரவாயல் நடப்போர் சங்கம், அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
சாலை போட குவிந்த மக்கள்
நேற்று சாலையை செப்பனிட தேவையான சிமெண்டு கலந்த ஜல்லி கலவைகள் 6 லாரிகள் மூலம் மதுரவாயல் பஸ் நிறுத்தம் அருகே குவிக்கப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு கூடியது. இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
போலீஸ் தடுத்தது
பொதுமக்கள் மற்றும் ஆதரவு தெரிவித்த சங்கங்களின் பிரதிநிதிகள் மதுரவாயல் பஸ் நிறுத்தம் அருகில் வந்தனர். அனைவரும் கலவையை கொட்டி சாலையை செப்பனிட முயன்றனர். அப்போது போலீசார் பொதுமக்களிடம் முறையான அனுமதி பெறாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறி கலைந்து போக உத்தரவிட்டனர்.
கடும் வாக்குவாதம்
ஆனால் பொதுமக்கள், ஆதரவு சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சாலையில் ஜல்லி கலவைகளை கொட்டி செப்பனிட முயற்சி செய்தவர்களை போலீசார் தடுத்ததால், பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சாலையை செப்பனிட முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஜல்லியை காலி செய்த மாநகராட்சி
பின்னர் சம்பவ இடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அங்கு கொட்டப்பட்டிருந்த ஜல்லி கலவைகள் மாநகராட்சி லாரிகளில் ஏற்றப்பட்டு, கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகா மோசமான சாலை
இந்த விவகாரம் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், தேமுதிக பிரமுகருமான யுவராஜ் கூறுகையில், கோயம்பேடு-வானகரம் இடையே சாலைகள் பயணிக்க முடியாத அளவுக்கு மோசமடைந்து உள்ளன. இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தநிலையில் மதுரவாயல்-துறைமுகம் மேம்பால பணியை மத்திய அரசு தொடங்கியது. ஆனால் அந்த பணிகள் பாதியிலேயே நிற்கிறது.
கண்டுகொள்ளாத அரசுகள்
இதையடுத்து மாநில அரசின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் பாலப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததார நிறுவனத்திடம் இந்த பராமரிப்பு பணியை கொடுத்துவிட்டோம். நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்றனர். மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டால், பாலம் அமைக்கும் பணியை மாநில அரசு தடைசெய்து விட்டது. எனவே அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கின்றனர்.
என்ன செய்வது என்று தெரியவில்லை
இரு அரசுகளும் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுகிறார்களே தவிர, மக்கள் சேவைக்காக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கோயம்பேடு பஸ் நிலையம், மார்க்கெட் என அருகே உள்ளதால் எந்நேரமும் நெரிசல் நிறைந்ததாகவே இந்த சாலை காணப்படுகிறது. எனவே இனியும் எங்கள் மனுக்கள் செல்லாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். நாங்கள் பயணம் செய்யும் சாலையை நாம் தான் செப்பனிட வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். அதனால் பொதுமக்களுடன், இந்த முயற்சியில் இறங்கினோம். ஆனால் எங்களின் நிலையை புரிந்துகொள்ளாமல் போலீசார் எங்களை தடுக்கின்றனர். எப்போது இந்த நிலைக்கு விடிவு ஏற்படும் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார்.