சென்னை வன்முறை.. பத்திரிகையாளர்களை தேடி தேடி உதைத்த போலீஸ்.. ஐடி காண்பித்தாலும் அடி!
சென்னையில் நேற்று நடந்தேறிய வன்முறை சம்பவங்களின் போது பத்திரிகையாளர்களை தேடி தேடி போலீஸ் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலத்த காயங்களுடன் பத்திரியாளர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள
சென்னை: மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நேற்று காலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். அப்போது, பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. சில இடங்களில் போலீசாரே ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு தீ வைத்து கொளுத்தினார்கள். இதனால் திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகள் போர்க்களமாக மாறின.
இந்த நிலையில், செய்தி சேகரிக்கவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் பத்திரிகையாளர்கள் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் கூடாது என்று தடுத்தனர். மேலும், செய்தி சேகரிக்க சென்றவர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவரையும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்து விரட்டி அடித்தனர்.
பத்திரிகை மற்றும் ஊடகத்தில் இருந்து செய்தியாளர்களாக வந்திருப்பதை பத்திரியாளர்கள் எடுத்துரைத்தும் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை. அவர்களது அடையாள அட்டை காண்பித்த பின்னரும் போலீசார் தாறுமாறாக அவர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் சுரேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று தீக்கதிர் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் லட்சுமி காந்த் பாரதி, தினகரன் பத்திரிகையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் அருண் ஆகியோரையும் போலீசார் தாக்கியுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் போலீஸ்காரர்கள் பொதுமக்களை எப்படி தேடித் தேடி அடித்து உதைத்தனரோ அதே போன்று புகைப்படக் கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்களையும் தேடித் தேடி அடித்தனர் என்று குற்றம்சாட்டினார்கள் பத்திரிகையாளர்கள்.