அதிமுக கொடுத்த பிரியாணி விருந்து.. படம் பிடித்த அதிகாரி மீது 'கேஸ்'....!
நெல்லை: நெல்லை மாவட்டம் குலசேகரம் அருகே அதிமுகவினர் கொடுத்த பிரியாணி விருந்தை வீடியோ படம் எடுத்த தேர்தல் அதிகாரி மீது போலீசார் வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஜான் தங்கம் போட்டியிடுகிறார். இவர் குலசேகரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், குமரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மனோகரன் வீட்டில் பிரியாணி விருந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தும்பங்கோடு வருவாய் ஆய்வாளர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்து வந்த போது அங்கு பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த அதிமுகவினரை வீடியோவில் பதிவு செய்தனர். அப்போது அதிமுகவினருக்கும், கண்காணிப்பு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அதிகாரிகளை மிரட்டி அனுப்பினர்.
இந்த பிரச்சனை தொடர்பாக வருவாய் ஆய்வாளர் பாரதி குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரி்ன் பேரில் அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம் உளளிட்டோர் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் மனோகரன் திடீரென குலசேகரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளி்தார். அதில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளை அழைத்து என் வீ்ட்டில் விருநது வைத்தேன். அப்போது வருவாய் ஆய்வாளர் பாரதி தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்தனர். எனது வீட்டு பணியாளர் சாந்தாவை தாக்கினர். தடுக்க சென்ற என்னையும் மிரட்டினர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் தும்பங்கோடு வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அதிகாரி தஙகபழம், உதவியாளர் முருகன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் கண்காணிப்பு குழு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு குழு மீதே போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துளளது.