ஓபிஎஸ் அணி பெண் ஆதரவாளர் மீது தாக்குதல்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்
ஆர்.கே.நகரில் பெண்ணை தாக்கியதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, ஓபிஎஸ் ஆதரவாளர் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தீபா பேரவை ஜெ.தீபா, தேமுதிக மதிவாணன், சிபிஎம் லோகநாதன், பாஜக கங்கை அமரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
தேர்தலையொட்டி தற்போது பிரசார களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக அம்மா கட்சி வேட்பாளர். டி.டி.வி. தினகரன் எப்படியாவது வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக 30 அமைச்சர்கள், 30 எம்பிக்கள், 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
பிரசாரத்தின்போது பல்வேறு காரணங்களினால் ஓபிஎஸ், தினகரன் தரப்பிற்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆர்.கே.நகர் தொகுதியில் ஏ.இ. கோவில் தெருவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக பொம்மி, உமையாள் என்ற பெண் நிர்வாகிகள் மதுசூதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்களைப் பார்த்து அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கே.டி.ராஜேந்திரன் உமையாள் என்ற பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட உமையாள் மற்றும் பொம்மி இருவரும் தண்டையார்பேட்டை எச்-3 காவல் நிலையத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது புகார் மனு அளித்துள்ளனர்.