அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்- மெரீனாவில் வாகனங்கள் செல்ல மீண்டும் தடை
சென்னை : சென்னை மெரினா உட்புர சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி அனிதாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த கூடும் என்பதனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துரை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா 12ம் பொது தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் அனிதாவுக்கு மருத்துவம் படிக்க முடியவில்லையே என்ற மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அனிதா வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
மாணவி அனிதா மரணத்தை கண்டித்து மாணவர்கள் மெரீனாவில் ஒன்று கூட திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதை தொடர்ந்து மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் ஒன்று திரண்டு மெரினாவில் கூடி உலகத்தையே தங்கள் பக்கம் திருப்பினர். அதேபோன்ற ஒரு மெரீனா புரட்சி மீண்டும் வெடிக்காமல் இருக்க சென்னை மாநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மெரீனாவின் சர்வீஸ் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடற்கரைக்கு வந்தால் அவர்களை விரட்டியடித்தனர்.
இதனிடையே நேற்றிரவு மெரீனாவில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கம் போல வாகனங்கள் சென்றன.
நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கோரி தமிழகத்தில் இன்று 4வது நாளாக போராட்டங்கள் நீடிக்கின்றன. சென்னையில் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து மெரீனாவின் உட்புற சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு காற்றுவாங்க வருபவர்களையும் போலீசார் கேள்வி கேட்டு வருகின்றனர். இதனால் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது போல மெரீனா கடற்கரை காணப்படுகிறது.