ஹைகோர்ட் தடையை மீறி பஸ் தின கொண்டாட்டம்: மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
சென்னை: சென்னையில் ஹைகோர்ட் தடையை மீறி பஸ்தினம் கொண்டாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் சென்னையில் மாணவர்கள் பஸ் தின கொண்டாட ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடினர். காலை அயனாவரத்தில் இருந்து பெசன்ட் நகருக்கு ‘23சி' பஸ் சென்று கொண்டிருந்தது.
கூரை மீது நடனம்
ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் சென்ற போது அந்த பஸ்சை கல்லூரி மாணவர்கள் சிறை பிடித்தனர். பின்னர் ஜெமினி மேம்பாலம் அருகே சென்ற போது பஸ் கூரை மீது ஏறினார்கள்.
மாணவர்கள் மறியல்
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பஸ் தினம் கொண்டாடுவதற்கு ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. எனவே, அனைவரும் கலைந்து செல்லும் படி கேட்டுக் கொண்டனர். ஆனால் மாணவர்கள் அதை ஏற்காமல் மறியலில் ஈடுப்பட்டனர்.
போலீஸ் தடியடி
மாணவர்கள் பிடிவாதமாக பஸ் தினம் கொண்டாவோம் என கூறி கும்பலாக நின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகவும் கடுமையானது. திடீர் மறியலால் அண்ணாசாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மாணவர் காயம்
அதில் மாணவர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக ஜெமினி மேம்பாலம் அருகிலும், நந்தனம் கலைக் கல்லூரி முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.