திருப்பூரில் சிக்கிய மதனுக்கு டிச. 5 வரை சிறை! நவ. 23-ல் ஜாமீன் மனு மீது விசாரணை!!
வேந்தர் மூவிஸ் மதனை டிசம்பர் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.
சென்னை: திருப்பூரில் பதுங்கியிருந்த போது பிடிபட்ட வேந்தர் மூவிஸ் மதனை 15 நாள் நீதிமன்றக் காவலில் அதாவது டிசம்பர் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். மேலும் மதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு மீது நவம்பர் 23-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி 110 மாணவர்களிடம் ரூ80 கோடி மோசடி செய்துவிட்டு தப்பி ஓடினார் மதன். 7 மாத தலைமறைவுக்குப் பின்னர் மதன் திருப்பூரில் இளம்பெண் ஒருவரின் வீட்டில் ரகசியமாக பதுங்கி இருந்தபோது சிக்கினார்.
திருப்பூரில் பிடிபட்ட மதனிடம் போலீஸ் கடுமையாக விசாரணை நடத்தி சென்னைக்கு கொண்டு வந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜர்படுத்தப்பட்ட மதனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
பின்னர் சென்னை எழும்பூர் நீதிபதி பிரகாஷ் வீட்டில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதன் தரப்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மதனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதனை 15 நாள் நீதிமன்ற காவலில் அதாவது டிசம்பர் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மதனின் ஜாமீன் மனு மீது நவம்பர் 23-ந் தேதி விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.