வீடு புகுந்து தாக்கிய திமுகவினர்.. முன்னாள் அமைச்சர் தென்னவன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
காரைக்குடி: வீட்டிற்குள் புகுந்து திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் தென்னவன் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது வீட்டிற்குள் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டி.டி.நகரில் முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி துணைத்தலைவருமான தென்னவன் வீடு உள்ளது. நேற்று மதியம் தென்னவன் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர், அங்கு இருந்த பொருட்கள் மற்றும் வெளியில் இருந்த காரையும் அடித்து சூறையாடினார்.
தாக்குதலைத் தடுக்க முற்பட்ட தென்னவனின் மகள் ராமஜெயம் மற்றும் வேலைக்காரர்களையும் அந்த கும்பல் தாக்கியது. இதில், அங்கிருந்த சிலருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த தாக்குதலில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீது சேதமடைந்தது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராமஜெயம் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அப்புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்களது வீட்டுக்கு திமுக மாவட்ட மீனவரணி அமைப்பாளரான இலுப்பக்குடி நாராயணன், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் துரை.கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முரளி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன், திருப்பத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் காரை செழியன், தேவகோட்டை சரவணன், காரைக்குடி கோ.நாகேந்திரன், சன்னவனம் குமார், ஆனந்த் மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 20 அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசி, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
மேலும் எனது தந்தைக்கு (தென்னவன்) கொலைமிரட்டல் விடுத்ததோடு, என்னை தாக்கியும், வீட்டில் இருந்த உறவினர்கள் 4 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்தி சென்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தென்னவன் வீட்டில் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகளைத் தேடி வருகின்றனர்.
தென்னவன் வீடு தாக்கப்பட்ட தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள், தாக்குதலில் ஈடுபட்ட திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முரளியின் வீட்டுக்கு சென்று தாக்க திட்டமிட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் சென்ற சமயத்தில் முரளி அங்கு இல்லாததால், அவரது வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த அடைக்கலம் என்பவரின் காரை அந்த கும்பல் நொறுக்கி சேதப்படுத்தியது. மேலும் அவர்கள் கற்கள் வீசியதில் வெளியில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு மண்டை உடைந்தது.
இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னவனின் ஆதரவாளர்கள் அய்யப்பன், பாண்டியன், வன்மீகநாதன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் தென்னவன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தென்னவனின் ஆதரவாளர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபடலாம் என கருதி திமுக நிர்வாகிகள் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அண்மையில் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளை தனது ஆதரவாளர்களுக்கு தென்னவன் பெற்றுத் தந்தார். இதில் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் இத்தாக்குதலில் ஈடுட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உட்கட்சி தேர்தல் தொடர்பாக திமுகவினர் நடத்திய தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications