பழனி சிலை முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு... போலீஸ் விசாரணையில் முத்தையா சொல்வாரா?
சிலை முறைகேடு புகாரில் சிக்கியுள்ள ஸ்தபதி முத்தையாவையும், ராஜாவையும் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் போலீஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தஞ்சை: பழனி தண்டாயுதபாணி கோவில் அபிஷேக மூர்த்தி ஐம்பொன் சிலை தயாரிப்பில் முறைகேட்டில் ஈடுப்பட்ட ஸ்தபதி முத்தையாவை 5 நாட்கள் காவலில் எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு, பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் 200 கிலோ எடையில் புதிய உற்சவர் சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய சிலையை வைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்காகத் திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டது.
சிலையைக் கோயிலிலேயே செய்ய வேண்டும் என்ற ஆகம விதியையும் மீறி சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டது. 200 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் சிலை கூடுதலாக 21.08 கிலோவில் செய்யப்பட்டிருந்தது.
புதியதாகச் செய்யப்பட்ட உற்சவர் சிலை சில நாட்களிலேயே கறுத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில் பூஜையே செய்யாமல் 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிலையில் வெள்ளி பயன்படுத்தப்படவே இல்லை. ஐம்பொன் சிலை என்று கூறப்படும் இதில் வெள்ளி கலக்கப்படவே இல்லை. 22 கிலோ செம்பு உள்ளிட்ட உலோகங்களை அதிக அளவில் சேர்த்து 221.08 கிலோ எடையில் சிலை தயாரிக்கப்பட்டது. இதில் 4.2 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் அப்போதைய மதிப்பு ரூ.24 லட்சம்.
அதைத் தொடர்ந்து, நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் சென்னையில் முத்தையா ஸ்தபதியையும், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜாவையும் மார்ச் 25ஆம் தேதியன்று கைது செய்தனர். கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையாவையும், ராஜாவையும் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் போலீஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி எடுத்தக் கொள்ளப்படும் என்று கும்பகோணம் நிதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே முத்தையா, நான் தெய்வ குற்றத்திற்கு ஆளாகி விட்டேன். அதனால்தான் சிறைக்கு வந்துவிட்டேன். இந்த மோசடியில் எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால் சிலை முறைகேட்டில் யார் யார் ஈடுபட்டனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியே வர வாய்ப்பு உள்ளது.