பெண்களையும் விரட்டி விரட்டி அடித்த காவல்துறை... திருப்பூரில் பதற்றம்
திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருப்பூர்: சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பெண்கள் என்றும் பாராமால் போலீசார் நடத்திய தடியடியால் திருப்பூர் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
திருப்பூர் சாமளாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காலை 8 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வெளுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் டாஸ்மாக் கடை மூடப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகள் உறுதியளித்தப் பின்னரும் பொதுமக்கள் கலையாமல் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
9 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பலரின் மண்டை உடைந்தது.
பெண்களையும் விரட்டி விரட்டி தடியடி துஷ்பிரயோகம் செய்த காவல்துறையினர், சாலையில் நடந்து சென்றவர்களையும் சரமாரியாக தாக்கினார்.
மக்களுக்கு ஆதரவாக அத்தொகுதி எம்எல்ஏவும் போராட்டம் நடத்த முயன்ற நிலையில் இந்த தடியடி நடத்தப்பட்டதாக தெரிகிறது. போலீசாரின் இந்த திடீர் தடியடியால் சாமளாபுரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.