ராம்குமார் கழுத்தை அறுத்த போட்டோவை எடுத்தது போலீஸ்தான்.. தந்தை பரபரப்பு பேட்டி
நெல்லை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் கழுத்தை அறுத்த போட்டோவை எடுத்தது போலீஸ்காரர்கள்தான் என்று அவரின் தந்தை, பரமசிவன் தெரிவித்துள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த, சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை கடந்த 1ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்ய முயன்றபோது, ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை தானே அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். ராம்குமார் கழுத்தை அறுத்தபோது எடுத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
கேள்விகள் ஆயிரம்
கைது செய்ய போன போலீசார் ஏன் ராம்குமார் தற்கொலை முயற்சி செய்ததை போட்டோ எடுக்க வேண்டும், இதுபோன்ற நடைமுறை அவசியமில்லையே, என்ற கேள்விகள் எழுந்தன.
போலீசார் அறுத்ததாக புகார்
இதனிடையே ராம்குமார் வழக்கில் ஜாமீன் கேட்டு ஆஜரான வக்கீல் கிருஷ்ணமூர்த்தியோ, ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீசாருடன் சென்ற நபர்கள்தான் என்று நிருபர்களிடம் கூறி குண்டை தூக்கி போட்டார்.
போலீஸ் எடுத்த போட்டோ
ராம்குமார் தந்தை பரமசிவன், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராம்குமார் கழுத்தறுபட்ட நிலையில் இருந்த போட்டோவை எடுத்தது போலீசார்தான் என கூறியுள்ளார். அவரது போட்டோவை லீக் செய்ததும் காவல்துறையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இதன்மூலம் எழுந்துள்ளது.
தந்தை கூறிய தகவல்
பரமசிவன் கூறியது: வழக்கமாக எனது மகன் பின்னால் இருக்கும் அறையில் படுத்து தூங்குவது வழக்கம். நான், எனது மனைவி, இரு பெண் பிள்ளைகள் முன் அறையில் படுப்போம். சம்பவத்தன்று போலீசார் இரவு 11.30 மணியளவில் வீட்டு கதவை தட்டினர்.
பெயரை மாற்றிய போலீஸ்
எனது மகள் வீட்டுக்குள் இருந்தபடியே, யார் என கேட்டார். இது முத்து குமார் வீடா..? என்று வெளியில் இருந்து கேள்வி வந்தது. எனது மகளோ, முத்து குமார்னு இங்க யாரும் இல்லைன்னு பதில் சொல்லினார். அப்போது மின்சாரம் இல்லை என்பதால், நான் டார்ச் லைட் கொண்டு சென்று கதவை திறந்தேன்.
கூட்டி சென்ற போலீஸ்
வெளியே போலீசார் நின்று கொண்டிருந்தனர். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் அப்படீயென்று கேட்டார்கள். எனக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன் அப்படீயென்று சொன்னேன். இப்படி பேசிக்கிட்டிருக்கும்போது, உங்க மகன் என்ன பண்ணிருக்கான் பாருங்கன்னு கூப்டுட்டு போனாங்க.
மயக்கம் போட்ட தந்தை
ராம்குமார் படுத்திருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, ஒரு போலீஸ்காரர் கால்மீது தலை தொங்கிப் போயி கிடந்தான். கழுத்தில் இருந்து ரத்தம் வழிஞ்சது. அவன் இறந்துவிட்டதாக நான் நினைத்தேன். அங்கு நின்ற இருவர் ராம்குமாரை போட்டோ எடுத்தனர். அந்த நிலையில் ராம்குமாரை பார்த்ததும் நான் மயங்கி விழுந்துவிட்டேன்.
மனைவி, மகளையும் அழைத்து சென்றனர்
சொந்தக்காரர்கள்தான் தூக்கி வந்து என்னை திண்ணையில் படுக்க வைத்தார்கள். ராம்குமாரையும், என் பெரிய மகளையும், மனைவியையும் உடன் கூட்டி சென்றனர். ராம்குமார் அரியர்ஸ் எழுதவே சென்னை சென்றார். மாதம் ஒரு முறை செலவுக்கு பணம் வாங்க வீட்டுக்கு வருவார்.
வழக்கமாக வருவார்
வழக்கமாக வருவதை போலத்தான் இப்போதும் ராம்குமார் வந்தார். சம்பளம் போட்டவுடனே தருகிறேன் என கூறினேன். ராம்குமாரும் வீட்ல வழக்கமா இருப்பதை போலத்தான் இருந்தார். தப்பு செஞ்சிருந்தான்னா அவர் தைரியமா இருந்திருக்க முடியுமா?
தைரியமா இருக்க முடியுமா?
போலீஸ்காரங்க ஊருக்குள்ள வரப்போக இருந்தபோது கூட அவங்க முன்னாடியே ஆடு மேய்க்கப்போயுள்ளான். தப்பு செஞ்சவனால இதைச் செய்ய முடியுமா? இவ்வாறு பரமசிவன் தெரிவித்துள்ளார்.
ராமராஜ் பார்த்துக்கொள்வார்
வழக்கு நடத்த தன்னிடம் பணம் வசதியில்லை என்று கூறும் பரமசிவன், தங்களது குடும்ப நண்பரான, வழக்கறிஞர் ராமராஜ் (நேற்று சிறையில் ராம்குமாரை சந்தித்தவர்) பார்த்து, எது செஞ்சாலும் சரிதான். நான் என் இரு பெண் பிள்ளைகளை கரை சேர்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு பரமசிவன் தெரிவித்துள்ளார்.