ரவுடி ராதாகிருஷ்ணனை காப்பாற்ற பினு கோஷ்டியை தூக்கியதா போலீஸ்?
ரவுடி ராதாகிருஷ்ணனை காப்பாற்ற பினு கோஷ்டியை அலேக்காக போலீஸ் தூக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Recommended Video
சென்னை: சென்னையில் மதுரை ரவுடி ராதாகிருஷ்ணனை காப்பாற்றுவதற்காகவே பினு கோஷ்டியை போலீஸ் கைது செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளத்தை சேர்ந்தவர் ரவுடி பினு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும் இவரது கூட்டாளிகளும் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர்.
இந்நிலையில் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் பினுவின் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக திரண்ட அவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீஸார் சுற்றி வளைத்தனர். பிடிபட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டு கொடுத்த ராதாகிருஷ்ணன்
கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலிடத்தில் உள்ள ராதாகிருஷ்ணனை போட்டு தள்ள வேண்டும் என்று பினுவும் கூட்டாளிகளும் சதி திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. மேலும் திடுக் தகவலாக தன்னை பினு கும்பல் போட்டு தள்ள ஸ்கெட்ச் போட்டிருப்பதை அறிந்த ராதாகிருஷ்ணனே போலீஸாருக்கு பினு கூடும் பிறந்த நாள் நிகழ்ச்சி குறித்து தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
என்ன வேலை
பினுவுக்கு போட்டியாக ரவுடி தொழிலில் கொடி கட்டி பறந்தவர் நாகேந்திரன். இவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து நாகேந்திரன் பிறப்பிக்கும் வேலைகளை கனகச்சிதமாக செய்து முடிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் மதுரையைச் சேர்ந்தவர். தற்போது அரும்பாக்கத்தில் உள்ளார். இவர் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன.
ராதாகிருஷ்ணனுக்கு என்ன பணிகள்
நாகேந்திரன் கோடு போட்டு கொடுத்தால் அதிலிருந்து ரோடு போடும் அளவுக்கு சாமர்த்தியம் உள்ள ராதாகிருஷ்ணன், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் தகராறு என அனைத்திலும் நம்பர் ஒன்னாக உள்ளார். சென்னையில் உள்ள 140 காவல் நிலையங்களில் இவர் சார்பில் இருந்து மாமூல் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. அதனால் இவருக்கு ஆதரவாகவே போலீஸார் உள்ளதும் தெரிகிறது. போலீஸாருக்கு மாமூலை வசூல் செய்வதற்காகவே திக்குவாய் சுதாகர், ஸ்கெட் அலாவுதீன், டோலாக் காந்தி என 10-க்கும் மேற்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டுள்ளார் ராதா.
பினு ஸ்கெட்
அதிக செல்வாக்கு மிக்கவராக வலம் வரும் ராதாகிருஷ்ணனை தீற்று கட்டுவதற்காகவே பினு தனது கூட்டாளிகளுடன் சதி திட்டம் தீட்டியுள்ளார். இதை எப்படியோ ராதாகிருஷ்ணன் அறிந்து கொண்டார். இதனிடையே பினு மலையம்பாக்கத்தில் கூட்டாளிகளுடன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டிருந்ததை அறிந்த ராதாகிருஷ்ணன் தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸுக்கு தகவல் அளித்துவிட்டார். இதன்பேரிலேயே போலீஸார் பினு கும்பலை பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ராதாகிருஷ்ணனை காப்பாற்றுவதற்காகவே பினு கும்பலை ஒருவர் விடாமல் போலீஸ் பிடித்துவிட்டதாகவும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.