”அரிசியோடு ஓட்டுக்கும் பணம்”- ரேஷன் கடை மூலம் பணப் பட்டுவாடா
சென்னை: ஓட்டுக்கு பணம் கொடுப்பது குற்றம் என்று தெரிந்தாலும் எப்படியெல்லாம் கொடுக்கலாம் என்று அரசியல் கட்சிகளும், நமக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்று மக்களும் யோசித்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலை ஒட்டி வீடுகளில் பணம் பட்டுவாடா செய்வதில் சிக்கல் உள்ளதால் ரேஷன் கடைகள் மூலம் பணம் வினியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் தேர்தல் ஆணையத்திற்கு புதிய தலைவலி ஆரம்பித்துள்ளது.வாகன சோதனையில் காட்டும் தீவிரத்தை இதிலும் தேர்தல் ஆணையம் காட்டியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

”பணமும்” பொது விநியோகம்:
தமிழகத்தில் 33520 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் போன்ற மற்ற உணவு பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.

ஐந்து முனைப் போட்டி:
வரும் 24 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவுவதால் வீடுகளில் பணம் வினியோகம் செய்யும் போது யாரேனும் ஒருவர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கின்றனர்.

துட்டு குடுத்தா ஓட்டு:
இதனால் பணம் வினியோகம் செய்வதில் சிக்கல் நிலவுவதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. அதேசமயம் "வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்" என்ற நிலை உள்ளதால் ஒரு சில அரசியல் கட்சிகள் பணம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றன.

பணப் பட்டுவாடா கனஜோர்:
இந்நிலையில் அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளுங்கட்சியினர் ரேஷன் கடைகள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் , " ரேஷன் ஊழியர்களுக்கு மட்டுமே வீடுகளில் உள்ள நபர்கள் குறித்த விவரம் முழுவதுமாக தெரியும். கடந்த ஜனவரியில் பொங்கல் பரிசாக 100 ரூபாய் வழங்கப்பட்டது.

கட்சிகளை பகைக்க முடியாது:
எனவே முன் அனுபவம் உள்ள ரேஷன் ஊழியர்கள் மூலம் பணம் வினியோகம் செய்ய அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.இதுகுறித்த புகார்கள் சில ஊழியர்கள் மூலம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால் அரசியல் கட்சிகளை பகைத்து கொண்டு எங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications