நாடாளுமன்றத்தேர்தல் 2014: தமிழக தொகுதிகளில் களமிறங்கத் தயாராகும் அரசியல் வாரிசுகள்
சென்னை: வாரிசு அரசியல் நேரு குடும்பத்தில் மட்டுமல்ல, திமுக,அதிமுக அமைச்சர்கள் தொடங்கி புதிய தமிழகம் வரை வந்துவிட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில் வாரிசுகளை களம் இறக்கிவிட்டு வெள்ளோட்டம் பார்த்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தற்போது நேரடியாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாரிசுகளை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களின் மகன்களை களமிறக்க தற்போது தொகுதியை தயார் படுத்தி வருவது போல, அதிமுக இன்னாள் அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.பிக்களும் குறிப்பிட்ட தொகுதியை குறிவைத்து காய்நகர்த்தி வருகின்றனராம்.
பா.சிதம்பரம் வாரிசு
மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என்று போகும் இடமெல்லாம் பேசி வரும் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் இந்தமுறை தனது ஆஸ்தான தொகுதியான சிவகங்கை போட்டியிடப் போவதில்லையாம். அதற்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கப் போவதாக தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் ஹசன் அலி ஆருண்
தேனி நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் ஆரூண் ரஷீத்தும் தனது வாரிசு ஹசன் அலி ஆரூணை நிறுத்தும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேசமயம் வலுவான கூட்டணி இல்லாவிட்டால் ஆரூணே மீண்டும் களத்துக்கு வரலாம் என்கிறார்கள்.
ஓ.பி.எஸ் மகனுக்கு
தேனி தொகுதியை ஓ.பி.எஸ். தனது மகன் ரவீந்திரநாத்குமாருக்காக தயார்படுத்துவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பேச்சு நிலவுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு எம்.பி. ஆவார். மத்தியில் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு வந்தால் அவருக்காக தந்தை வழியில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் ரவீந்திரநாத்குமார். இடைத்தேர்தலில் ஜெயலலிதா தேனியில் போட்டியிட்டு எம்.பி. ஆவார் என்கின்றனர்.
துரைமுருகனின் வாரிசு
முன்னாள் அமைச்சர்கள் சிலர், தங்கள் வாரிசுக்கு, 'சீட்' கேட்டு கொடி தூக்கியுள்ளனராம். துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்துக்காக, வேலூர் தொகுதி கேட்டு, 130 விண்ணப்ப மனுக்கள் கொடுக்க வைத்துள்ளார். கூட்டணியில் உள்ள, முஸ்லிம் லீக் கட்சியும், இதே தொகுதியை கேட்டு வருகின்றனராம்.
ஐ.பெரியசாமியின் மகன்
முன்னாள் அமைச்சர், ஐ.பெரியசாமி, தன் மகன் செந்தில் குமாருக்காக, திண்டுக்கல் தொகுதியை குறிவைத்துள்ளாராம். பொங்கலூர் பழனிச்சாமி, தன் மகன் பாரிக்காக, கோவை தொகுதியை கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரியசாமியின் மகன்
தூத்துக்குடி மாவட்ட செயலர் பெரியசாமி தன் மகன் ஜெகனுக்காக, தூத்துக்குடி தொகுதியை கேட்டுள்ளாராம்.இப்படி, 'மாஜி'க்கள் எல்லாரும் தங்கள் வாரிசுகளை களம் இறக்க முயற்சிப்பதற்கு, அந்தந்த மாவட்ட தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பி வருகிறதாம்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் வாரிசு
டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசியில் தனது மகளை நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்த தொகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தேர்தல் வேலைகள் மேற்கொண்டு வருகிறாராம்.
தென்காசி தொகுதியை விட்டுத் தருவதாக தந்த உத்தரவாதத்தின் பெயரிலேயே அதிமுக அணியிலிருந்து டாக்டர் கிருஷ்ணசாமி திமுக பக்கம் மெதுவாக சாய ஆரம்பித்தார். இந்நிலையில், தனக்காக கேட்டுப் பெற்ற தென்காசி தொகுதியில் தனது மகள் சங்கீதாவை நிறுத்தும் முடிவில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
வாரிசுகள் ஜெயிப்பார்களா?
வாரிசுகள் களமிறங்குவது அரசியலில் புதிய விசயமில்லை. வடமாநிலங்களில் பல அரசியல் தலைவர்கள் கடந்த லோக்சபா தேர்தலிலேயே முன் உதாரணமாக திகழ்கின்றனர். தமிழ்நாட்டில் களமிறங்கும் வாரிசுகள் ஜெயிப்பார்களா? வாக்காளர்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.