பொள்ளாச்சி ஹாஸ்டல் சிறுமிகள் பலாத்காரம்: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!
கோவை: பொள்ளாச்சி விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கவும், அவர்களுக்கு அரசு வேலை வழங்கவும் நீதிபதி சுப்பிரமணி உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. என்ற கிறிஸ்தவ நிறுவனத்துக்கு சொந்தமான காப்பகம் செயல்பட்டு வந்தது. கடந்த 11-6-2014 அன்று இந்த காப்பகத்துக்குள் வால்பாறையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வீராச்சாமி (வயது 23) புகுந்து அங்கு தங்கி இருந்த 11 மற்றும் 8 வயதான 2 சிறுமிகளை அந்த காப்பகத்தின் அருகே உள்ள மாடிக்கு கடத்திச்சென்று அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பினான்.
தப்பி ஓடிய வீராச்சாமியை கைது செய்த பொள்ளாச்சி போலீசார், அத்துமீறி நுழைதல், கடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வகையில் கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் 24ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்தார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வீராச்சாமி நேற்று காலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியம் நேற்று மாலை தீர்ப்பு கூறினார்.
தண்டனை அறிவிப்பு
காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சிறுமிகளை கடத்தியதற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
மாணவிகளுக்கு இழப்பீடு
மேலும் காப்பகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததாலும், குற்றச்செயல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளி அத்துமீறி நுழைந்ததற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடாக டி.இ.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை இதற்கான உத்தரவு கிடைத்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த தொகையை டி.இ.எல்.சி. நிர்வாகம் சிறுமிகளுக்கு வழங்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அந்த தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அரசு வேலை
அதுபோன்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலன்கருதி, அவர்கள் படிப்பதற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், 18 வயது முடிந்ததும், அவர்களின் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆணையர் நியமனம்
மேலும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் படிப்பு மற்றும் உதவிகளை ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் சண்முக நாதன் என்பவரை நியமித்து ஒவ்வொரு மாதம் 31ஆம்தேதி ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம்தேதி அதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வக்கீலுக்கான செலவை சட்ட உதவி ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்.