பொங்கல் பண்டிகைக்கு ரெடியா?.. சொந்த ஊருக்கு போக ரயில்ல டிக்கெட் போட்டாச்சா??
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். ஜனவரி 13ம் தேதி போகிப்பண்டிகை தினத்தில் சென்னையில் இருந்து கிளம்பும் ரயில்களுக்கு நாளை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தை திருநாளுக்கு போகி தொடங்கி காணும் பொங்கல்வரை 4 தினங்கள் விடுமுறை விடப்படும் என்பதால் ஏராளமானோர் சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு வருவார்கள். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி வருகிறது. எனவே 13ம் தேதி போகிப் பண்டிகை நாளில் சொந்த ஊருக்கு செல்வார்கள். பெரும்பாலானவர்கள் ஜனவரி 12ம் தேதி இரவே சென்னையில் இருந்து கிளம்பிவிடுவார்கள்.
இதுபோன்று சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுபவர்கள் பாதுகாப்பு, நேரம் குறைவு, உள்ளிட்ட வசதிகளை கருத்தில் கொண்டு பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் முண்டியடித்து கொள்வார்கள். இதையடுத்து பயணிகளின் வசதிக்காக தற்போது 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு துவக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி போகியுடன் தொடங்குகிறது. ஜனவரி 13ம் தேதி வெள்ளிக்கிழமை போகி, 14ம் தேதி சனிக்கிழமை தைப் பொங்கல், 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாட்டுப்பொங்கல், 16ம் தேதி திங்கட்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 11ம் தேதி ரயில் முன்பதிவு
சென்னையில் இருந்து போகிக்கு 2 நாட்கள் முன்பு ஜனவரி11ம் தேதி புதன்கிழமை புறப்படும் ரயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை முதல் பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் வரிசையில் நின்று ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். தற்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய இளைஞர்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் ஆன்லைனிலேயே டிக்கெட் முன்பதிவு செய்தனர். நேற்றைய தினம் ஒருசில ரயில்களில் வழக்கம்போல் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தன.
டிக்கெட் நிலவரம்
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வழியாக செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் விற்றுவிட்டன. இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வழியாக நெல்லை செல்லும் பல ரயில்களில் குறைந்த அளவு டிக்கெட் மட்டுமே இருந்தன. அதன்படி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 60, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்சில் 64, நெல்லை எக்ஸ்பிரசில் 280, அனந்தபுரி எக்ஸ்பிரசில் 197, முத்துநகர் எக்ஸ்பிரசில் 340, மன்னார்குடி எக்ஸ்பிரசில் 160 டிக்கெட்கள் மட்டுமே விற்காமல் இருந்தன.
ஜனவரி 12ம் தேதி இரவு கிளம்பும் ரயில்கள்
ஜனவரி 12ம் தேதி வியாழக்கிழமையன்று பயணம் செய்யும் ரயில்களுக்கான டிக்கெட்டுகள் இன்று முன்பதிவு செய்யப்பட்டன. அனைத்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன. இதனால் பெரும்பாலான பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
நாளையும் முன்பதிவு செய்யலாம்
ஜனவரி13ம் தேதி வெள்ளிக்கிழமை போகியன்று புறப்படும் ரயிலுக்கு நாளையும் ஜனவரி14ம் தேதி சனிக்கிழமை பொங்கலன்று புறப்படும் ரயிலுக்கு செப்டம்பர்16ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். இதேபோல் பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு இம்மாதம் 18ம் தேதி தொடங்குகிறது. அதாவது ஜனவரி16ம் தேதி திங்கட்கிழமை காணும் பொங்கல் முடிந்ததும் ரயில் ஏற விரும்புபவர்கள் செப்டம்பர்18ம் தேதி முன்பதிவு செய்யலாம்.