ஸ்டாலினை எதிர்க்க முடியாமல் மூட்டை கட்டிய குஷ்பு!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு கட்சியில் நீடிக்க முடியாது என்பதால் விலகல் முடிவை குஷ்பு அறிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு குஷ்பு கட்சியில் சேர்ந்த போது கருணாநிதியின் ஆதரவாளராக இருந்தார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் காலம் மாறி கட்சி ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
இதை உள்வாங்கிக் கொள்ள முடியாத குஷ்பு, கருணாநிதி இருக்கிறாரே என்ற தைரியத்தில் ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்க முடியாது என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். ஆனால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர்.
குஷ்பு மீது தாக்குதல்
திருச்சியில் குஷ்பு தங்கியிருந்தபோது கற்களூம் செருப்புகளும் வீசப்பட்டன. அப்போதும் கூட குஷ்புவையும் அவரது குழந்தைகளையும் மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கருணாநிதிதான் அறிக்கை கொடுத்தார். அதை ஸ்டாலின் சகிக்கவில்லை.
தென்சென்னை தொகுதி
அதன் பின்னர் குஷ்பு சிறிதுகாலம் அமைதியாக இருந்தார். திடீரென கட்சிக்குள் தலைகாட்டினார். அதே நேரத்தில் தேர்தல் நெருங்க வழக்கம் போல் குஷ்புவுக்குத்தான் தென் சென்னை லோக்சபா தொகுதி கொடுக்கப்படும் என்று பேச்சுகள் எழுந்தன.
கருணாநிதி கோட்டா
அதுவும் கருணாநிதி தமது கோட்டாவில் தென்சென்னை லோக்சபா தொகுதியை வாங்கிக் கொடுக்கப் போகிறார் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் குஷ்புவோ விருப்ப மனுவே கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டார்.
தேர்தல் பிரசாரம்
அதன் பின்னர் குஷ்பு தேர்தல் பிரசாரம் பற்றி சர்ச்சை வந்தது. குஷ்பு தேர்தல் பிரசாரத்துக்கே போகமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அப்போதும் கருணாநிதியே குஷ்பு பிரசாரத்துக்குப் போவார் என்று அறிவித்தார்.
ஒத்துழைப்பு
அதே நேரத்தில் குஷ்பு பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் "ஸ்டாலின் உத்தரவுப்படி" அவருக்கு கட்சி பிரமுகர்கள் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் பிரச்சனை வந்தது. இதனைத்தான் என் உழைப்பு ஒருவழிப்பாதையாகிறதே என்று தமது விலகல் கடிதத்தில் குஷ்பு அங்கலாய்த்திருக்கிறார்.
ஸ்டாலின் எதிர்ப்பு
அதாவது இனியும் திமுகவில் ஸ்டாலினை எதிர்த்து போராட முடியாது; ஸ்டாலினுடன் இணைந்தும் வேலை செய்ய முடியாது என்ற காரணத்தால் வேறுவழியில்லாமல் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் குஷ்பு என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்..