திமுக 'போட்டி' பொதுக்குழுக் கூட்டம்.. திருச்சியில் திடீர் போஸ்டரால் சலசலப்பு
திருச்சி : திருச்சியில் தி.மு.க. பொதுக் குழு கூட்டம் ஜனவரி 30 ம் தேதி நடைபெறும் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.பொதுக் குழு கூட்டம் கடந்த டிசம்பர் 15 ம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என மிக முக்கிய அறிவிப்பை தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டார். இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகவும், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி ஆகியோரது படங்களை கொண்ட கலர் போஸ்டர் திருச்சி நகர் முழுவதும் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ஜனவரி 30 ம் தேதி தி.மு.க. பொதுக் குழு கூட்டம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரின் கீழே, இப்படிக்கு, மதுரை தம்பிகள், அன்பரசு இளங்கோவன், கீரிப்பட்டி செந்தில்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை கண்ட திமுக முன்னணி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
இந்த போஸ்டர் குறித்து, திமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, உண்மையான திமுக தொண்டன் யாரும் இப்படி செய்யமாட்டான். கட்சியில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என மாற்றுக் கட்சியைச் சேர்ந்த, யாரோ சில விஷமிகள் தான் இப்படி செய்து இருப்பார்கள். எங்கள் தலைவர் கருணாநிதி எத்தனையோ பல அரசியல் தலைவர்களை பார்த்து , பழகி அரசியல் செய்தவர். இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் அவர் பயப்படமாட்டார். ஏன் நாங்களே பயப்படமாட்டோம் என்றனர்.
போஸ்டரை ஒட்டிவர்கள் மீது நவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க திமுக முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications