மின்வெட்டு வேற.. மின் தடை வேற..: சட்டசபையில் அமைச்சர் 'நத்தம்' புது விளக்கம்!
சென்னை : தமிழகத்தில் மின்வெட்டு அறவே இல்லை.. அதே நேரத்தில் சில இடங்களில் மின் தடை இருக்கலாம் என்று சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார்.
இது குறித்து சட்டசபையில் நேற்று திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி பேசுகையில், தமிழகத்தில் மின்வெட்டு ஓரளவுதானே குறைந்துள்ளது என்றார்.
மின்வெட்டே கிடையாது
இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., ஆட்சியில் 2008 முதல் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட மின்வெட்டு நடப்பாண்டு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என்றார்.
துரைமுருகன் குறுக்கீடு
அப்போது திமுகவின் துரைமுருகன் எழுந்து பேசினார். ஆனால் சபாநாயகர் அதை சபைக் குறிப்பில் நீக்குவதாக அறிவித்தார்.
நத்தம் விஸ்வநாதன்
பின்னர் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்நாதன், தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதை முழுமையாக நீக்கியவர் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்க வேண்டும் என காங்கிரசும், தி.மு.க.,வும் எடுத்த முயற்சிகளை முறியடித்து மின்வெட்டு இல்லாத மாநிலத்தை ஜெயலலிதா உருவாக்கி உள்ளார்.
மின்வெட்டு வேற.. மின் தடை வேற
மின்வெட்டுக்கும், மின் தடைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதுதான் மின்வெட்டு
தேவைக்கேற்ற மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டு ஏற்படுத்தப்படும்.
இது மின் தடை
தேவையான மின்சாரம் இருந்தும் மின் மாற்றி போன்றவற்றில் ஏற்படும் பழுது காரணமாக சில மணி நேரம் மின் தடை ஏற்படும். உடனே அவை சரி செய்யப்படும். தற்போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. சில இடங்களில் மின் தடை இருக்கலாம் என்றார்.