நமது செய்தி எதிரொலி: ஏழை மாணவி சௌஜன்யாவின் கல்விக்கு ஓடிவந்து உதவும் வாசகர்கள்!
சென்னை: ப்ளஸ் டூ தேர்வில் சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பயின்று 1168 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்ற மாணவி எம்.சௌஜன்யாவின் கல்விக்கு நல்ல மனம் படைத்த நமது வாசகர்கள் உதவ ஆரம்பித்துள்ளனர்.
செளஜன்யாவின் நிலை குறித்து நாம் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து இந்த உதவிகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
(ஏழ்மை நிலையிலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் கல்விக்கு உதவுங்களேன்..)
இதுவரை மாணவி சௌஜன்யா சி.ஏ. படிக்கத் தேவையான முதல், மற்றும் இரண்டாம் பருவத்திற்குத் தேவையான பணம் கிடைத்துள்ளது. அதைக் கொண்டு அவர் மேற்கு மாம்பலம் கே.எஸ்.சி.ஏ. பயற்சி அகடமியில் இணைந்துள்ளார். சிங்கப்பூரில் பணியாற்றும் பிரவீன்குமார், முருகன், டெல்லி பாபு, தணிகை அரசு, வினோத்குமார், செல்வகுமார், மோகன் ராஜ், இந்தியாவில் வசிக்கும் லாவண்யா, ரஜினி காந்த, மற்றும் இரு நபர்கள் ஒருங்கிணைந்து சிங்கபூரிலிருந்து கடந்த வாரம் சென்னை வந்த பிரவீன்குமார் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று நேரடியாக 62 ஆயிரத்தி 500ரூபாயை மாணவி சௌஜன்யா வீட்டுக்கு சென்று வழங்கினார்.
முதல் கட்டமாக உதவி செய்துள்ளனர். மேலும் மாணவி தொடர்ந்து படிக்க தேவையான உதவிகளை நண்பர்கள் மூலம் இன்னும் உதவிகள் பெற்று தருவதாகவும் பிரவீன்குமார் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதே போல மேலும் பல வாசகர்களும் ஆன் லைன் மூலம் செளஜன்யாவின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி வைத்து வருகின்றனர்.
இதுகூறித்து பிரவீன்குமார் நம்மிடம் கூறும்போது: இந்தியாவில் திறமையானவர்கள் நிறைந்து இருக்கிறோம். ஆனால் போதிய உதவிகள் கிடைக்காமல் அவர்களது திறமை வீணாகிவிடுகிறது. நாங்களும் சாதாரண குடும்பத்தினர்தான் இங்குவந்து உழைக்கிறோம். நம்மால் நம் நாட்டுக்கு எதாவது உதவிகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் வரும் ஆனால் வழிதெரியவில்லை. இந்த மாணவி குறித்த செய்தியை உங்கள் இணையத்தின் முகநூல் வழியாக படித்து அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்தேன். அனைவரும் உதவுவோம் என்று முடிவு செய்து முதல்கட்டமாக நான் நேரில் வந்து அவர்கள் நிலையை பார்த்தேன். நிறைய நண்பர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளேன்.
அவர்களும் உதவுவார்கள், முதல் கட்ட உதவி செய்துள்ளோம். உங்கள் இணையத்தில் தமிழர்கள் தெரிந்துக் கொள்ள நல்ல நல்ல செய்திகள் வருகிறது. சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உங்கள் செய்திகளை பார்த்துதான் நிறைய விசயங்களை தெரிந்துக் கொள்கிறோம். பகிர்ந்துக் கொள்கிறோம், இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுங்கள். ஏழைகள் இல்லாத நாடக நம் நாடு கல்வி, பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்றார்.
மேலும் மாணவி சௌஜன்யாவுக்கு வடசென்னை மாவட்டத்தை சார்ந்த அரசியல் கட்சி பிரமுகர் மனோ, சிங்கப்பூரில் வசிக்கும் தங்கராஜ் உள்ளிட்டோர்களும் உதவியுள்ளனர்.
மாணவியின் தந்தை மாலகொண்டைய்யா கூறும் போது; என் மகளின் கல்விக்காக உங்கள் இணையத்தளம் மூலம் வாசகர்களின் உதவி கிடைத்ததை வாழக்கையில் மறக்க முடியாது. என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிறைய பேர் உதவிசெய்வதாக சொல்லியுள்ளனர். சிலர் நேரடியாக வந்து உதவிவிட்டு செல்கின்றனர். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சௌஜன்யாவின் தந்தை மாலகொண்டைய்யா (50), கண்பார்வையற்றவர். மாதம்தோறும் அரசு தரும் 1000 ரூபாய் உதவி பணம் மற்றும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்துள்ளார். இவர்கள் ஆதி ஆந்திரர் வகுப்பை சேர்ந்தவர்கள்.
மாணவியின் தந்தை தாயார் 2007ம் ஆண்டு இறந்து விட்டார். தந்தையும் கண்பார்வையற்றவர். இந்நிலையில் வீட்டு வேலைகளையும் முடித்து இடைவேளையில் படித்து இவ்வளவு பெரிய சாதனையை எட்டியுள்ளார். சௌஜன்யாவிற்கு பிஎஸ்சி பயிலும் ஒரு சகோதரியும், பத்தாம் வகுப்பு பயிலும் தம்பியும் உள்ளனர்.
வறுமையிலும் செம்மை
அரசாங்கம் தரும் உதவி தொகை குடும்பத்திற்கே போதாத நிலையில் வறுமையான சூழ்நிலையில் 1168 மார்க்குகள் பெற்றுள்ளார். ஏழ்மை நிலையிலும் அதிக அளவில் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த சௌஜன்யாவின் கனவு சிஏ படிக்கவேண்டும் என்பதுதான். அதற்காக உதவி கோரியிருந்தார்.
உதவிய அனைவருக்கும், இந்தத் தகவலை பிறரிடம் பகிர்த்து உதவி செய்ய வைத்தவர்களுக்கும் ஒன் இந்தியா தமிழ் இணையத்தளத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்.