கபாலிக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள்? கேட்கிறார் பிரேமலதா
சென்னை: கபாலி படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சலுகை.. வன்முறை அதிகம் இருந்து வரி விலக்கு கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா.
கபாலி திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது. படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததோடு, தமிழக அரசு வரிவிலக்கும் கொடுத்துள்ளது. ஆனால் கபாலி திரைப்படத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் வன்முறைகளும் சர்வசாதாரணமாக உள்ளன.
படத்தின் தலைப்பு ஒரு எழுத்து மாறினால் கூட வரிவிலக்கு கிடையாது என்று கூறி விடுவார்கள். ஆனால் காபாலிக்கு வரி விலக்கு கிடைத்தது எப்படி என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
இதனிடையே கபாலி படம் பற்றி கருத்து கூறியுள்ள பிரேமலதா, கபாலி படம் நல்லாயிருக்கு... நல்லாயில்லை என்பது வேற விஷயம். ஆனா, என் ஆதங்கம் எல்லாம் இந்தப் படத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள்? என்று கேட்டுள்ளார்.
ஓவர் நைட்ல எல்லா வெப்சைட்களையும் லாக் பண்றாங்க. படத்துல வெட்டுக்குத்து வன்முறைகள் இருந்தும் வரிவிலக்கு கொடுக்கிறாங்க... ஏன்? என்று கேட்டுள்ள பிரேமலதா ஜாஸ் சினிமாஸ்' நிறுவனம் கபாலி'யை ரிலீஸ் செய்ததுதான் காரணமா? என்றும் அவராகவே அதற்கு பதில் கூறியுள்ளார்.
எல்லா படங்களுக்குமே இந்த மாதிரி செய்தால், திரையுலகம் நல்லாயிருக்குமே. பக்கத்தில் உள்ள சில மாநிலங்களில் எல்லா படங்களுக்குமே வரிவிலக்கு உண்டு. சினிமா துறை நல்லா இருக்கணும். இதுதான் கேப்டனின் கருத்தும்கூட என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.