டோணியின் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அசத்தல்: 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே மற்றும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணிகள் மோதின. இதில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புனே வெற்றி பெற்றது.
2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஐபிஎல். ரசிகர்கள் வரவேற்பை தொடர்ந்து இதுவரை 8 போட்டித் தொடர்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (2010 மற்றும் 2011), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2012 மற்றும் 2014), மும்பை இந்தியன்ஸ் (2013 மற்றும் 2015) ஆகிய அணிகள் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), அணிகள் தலா 1 தடவையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு சிம்மன்ஸ், ரோகித் சர்மா துவக்கம் தந்தனர். இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ரோகித் 7 ரன்னில் அவுட் ஆனார். சிம்மன்ஸ் (8), பாண்ட்யா (9), பட்லர் (0), போலார்டு (1) அவுட் ஆகி வெளியேறினர்.
நம்ம சென்னை வீரர் முருகன் அஷ்வின் வீசிய சுழலில் சிக்கிய ஸ்ரோயாஸ் கோபால் (2),ரன்னில் அவுட் ஆனார். வினய்குமார் (12), அவுட் ஆக மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. ஹர்பஜன் (45), மெக்லீனகன் (2) ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
மும்பை அணியை தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய புனேவுக்கு ரஹானே அதிரடியாக 42 பந்தில் 66 ரன்னும்,டூ பிளசிஸ் 33 பந்துகளில் 34 ரன்களும் சேர்த்தனர். டூ பிளசிஸ் அவுட்டை தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு ரஹானேவுடன் இணைந்த பீட்டர்சன் 14 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். இதனால் 14.4 ஓவரில் புனே அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
51 நாள் திருவிழா
9வது ஐபிஎல் இன்று தொடங்கியது. முன்னதாக நேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. மே 29ம் தேதி வரை 51 நாட்கள் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
புதிய அணிகள்
சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் இந்தப் போட்டியில் விளையாடுகின்றன.
மொத்தம் 8 அணிகள்
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன்ரைசரஸ் ஐதராபாத் ஆகியவற்றோடு இந்த இரண்டு புதிய அணிகளையும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
அடுத்த சுற்று
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். மே 22ம் தேதிவரை லீக் ஆட்டம் நடைபெறும்.
குவாலிஃபையர்
பிளே ஆப் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிஃபையர் 1ல் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 3வது, 4வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணியும், குவாலி பையர் 1ல் தோற்கும் அணியும் குவாலிஃபையர் 2ல் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு நுழையும் மற்றொரு அணியாக இருக்கும்.
விராட் கோஹ்லி
இறுதிப் போட்டிக்கு 2 முறை தகுதி பெற்றும் ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத பெங்களூர் அணி இந்த முறையாவது சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. அந்த அணி கேப்டன் விராட் கோஹ்லி 20 ஓவர் போட்டிகளில் மிகவும் நல்ல ஃபார்மில் உள்ளார்.
இரவு போட்டி
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய புனே 14.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.