மனைவியை தற்கொலைக்கு தூண்டிய பஸ் கண்டக்டர், கள்ளக்காதலிக்கு 10 ஆண்டு சிறை
ஈரோடு: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் அவரது கள்ளக்காதலிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெஞ்சனூர் மூலக் கடை பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் செல்வன் (27). தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணி புரிந்து வந்த செல்வனுக்கு, தனது பேருந்தில் தினமும் பயணம் செய்து வந்த ஸ்ரீமதியுடன் காதல் ஏற்பட்டது.
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள எரக்காட்டுபாளையத்தில் இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். வழக்கம் போல செல்வன் தனது நடத்துனர் பணியையும், ஸ்ரீமதி மில் பணியையும் தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் செல்வனுக்கு தனது பேருந்தில் தினமும் பயணம் செய்யும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ராமர் கோவில் வீதியை சேர்ந்த நிஷா என்கிற நதியா பேகம் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நிஷா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. செல்வனும், நிஷாவும் பல்வேறு இடங்களில் தனிமையில் சுற்றியது ஸ்ரீமதிக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக செல்வனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீமதி. ஆனால், ஸ்ரீமதியை வீட்டிற்கே வந்து மிரட்டிச் சென்றுள்ளார் நிஷா. இதற்கு செல்வனும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீமதியை அவரது தோழியின் கணவருடன் இணைத்து பேசி வந்துள்ளார் செல்வன். இதனால் மனமுடைந்த ஸ்ரீமதி சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் தலைமறைவானார்.
இதுபற்றி தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை தேடி வந்தனர். இந்தநிலையில் செல்வன், அவரது கள்ளக்காதலி நிஷாவுடன் வந்து சரண் அடைந்தார்.
இவர்கள் 2 பேர் மீதும் ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் ஸ்ரீமதியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக செல்வன் மற்றும் நிஷா என்கிற நதியா பேகத்துக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.