அதிமுகவுக்கு சுழிபோட்ட 'திண்டுக்கல்' தொகுதியை தக்க வைப்பாரா உதயகுமார்?
திண்டுக்கல்: அதிமுகவின் வரலாற்றில் திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தல் தவிர்க்க முடியாதது.. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய அடுத்த ஆண்டிலேயே திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி அபார வெற்றி பெற்றது. அதுவே அதிமுகவின் விஸரூப வளர்ச்சிக்கும் அடிகோலியது.
அப்படிப்பட்ட அதிமுகவின் கவுரவ தொகுதியான திண்டுக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் நிலக்கோட்டை நகர செயலரான உதயகுமார். இவர் ஒரு வழக்கறிஞர்.
நிலக்கோட்டை தொடக்கக் கூட்டுறவு வங்கித் தலைவராகவும் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் திண்டுக்கல் கூட்டுறவு ஒன்றிய இயக்குனராகவும் பதவி வகித்து வந்தார். கல்லூரி காலத்தில் இருந்து அ.தி.மு.க. மாணவர் அணியில் இருக்கிறார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் இருந்தவர். 2006ம் ஆண்டு நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் நிலக்கோட்டை பேரூராட்சிக்கான தேர்தலில், 11-வது வார்டில் தோல்வியைத் தழுவியவர். நிலக்கோட்டை தவிர, மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் அறிமுகமே இல்லாதவர். அத்துடன் வார்டு தேர்தலிலேயே வெல்லக் கூட முடியாதவரா? எம்.பி. தேர்தலில் ஜெயிப்பார் என்று தொடக்க நாளிலேயே விமர்சனத்தை எதிர்கொண்டவரும் உதயகுமார்.
தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் நத்தம் விஸ்வநாதனின் மச்சான் கண்ணனுக்குத்தான் சீட் கிடைக்கும் என்று அதிமுகவினர் நம்பினர். கண்ணனும் கூட தமக்குத்தான் சீட் என்றும் தாமே எம்.பி. என்றும் கோதாவில் வலம் வந்தார். ஆனால் உதயகுமாருக்கு சீட் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. இதனால் உதயகுமாரை வெற்றி பெற வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நத்தம் விஸ்வநாதனுக்கு வந்து விழுந்திருக்கிறது.
அதிமுகவின் தேர்தல் வரலாற்றில் சுழிபோட்டுக் கொடுத்த திண்டுக்கல் தொகுதியை உதயகுமார் தக்க வைப்பாரா?