சிவகாசி பட பாணியில சிங்காநல்லூரில் அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராக களமிறங்கும் சகோதரி
கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கைமுத்துவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட அவரது சகோதரி என்.எம்.பிரபாவதி மனு தாக்கல் செய்துள்ளார். சிவகாசி பட பாணியில் அண்ணனுக்கு எதிராக தங்கையே தேர்தலில் போட்டியிடுவது சிங்கநல்லூர் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது சகோதரர், சொத்து பங்கினைக் கொடுக்காமல் ஏமாற்ற முயலுகிறார். சொந்த சகோதரிக்கான குடும்ப சொத்தையே கொடுக்காதவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்? என்பதுதான் அதற்கு அவர் தெரிவித்திருக்கும் காரணம்.
சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வி.மோகனிடம் நேற்று மனு தாக்கல் செய்த அவர், தன் சார்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
அதில் எனது தந்தை பெயரில் உள்ள சொத்தை ஏழ்மை நிலையிலுள்ள தனக்கு கிடைக்காமல் செய்ததை விரிவாக குறிப்பிட்டு, ‘இதுகுறித்து முதல்வருக்கும், அதிமுக பிரமுகர்களிடமும் புகார் அளித்துள்ளேன். நியாயம் கிடைக்காததால், சகோதரர் சிங்கைமுத்துவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அவர் எங்கெங்கு சொத்துகள் வைத்துள்ளார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளது. பிரச்சாரத்தின் போது அவற்றை வெளியிடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரபாவதி, என்னோடு பிறந்தவர்கள் மூன்று அண்ணன்கள், ஒரு அக்கா. சிங்கை முத்து இரண்டாவதாக பிறந்தார். நான் கடைசிப் பெண்ணாக பிறந்தேன். பெரிய அண்ணன் இறந்துவிட்டார். அவருக்குக் கொடுக்க வேண்டிய சொத்துக்களை எல்லாம் முத்து கொடுத்துவிட்டார். எல்லாமே எங்க அப்பா சம்பாதித்த சொத்துக்கள்தான். எனக்கென்று எதையும் கொடுக்கவில்லை.
சோழா ஓட்டல் பின்புறம் என் அம்மா குடியிருந்த பத்து சென்ட் இடம் இருந்தது. அந்த இடத்தையும் நாலு கோடி ரூபாய்க்கு விலை பேசி முடித்துவிட்டார். எங்கம்மா வாழ்ந்த வீடு அது. 'ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க முடியாது'ன்னு சொல்லி மிரட்டறார்.
இதற்கு முன்பு நான் தேர்தலில் நின்றதில்லை. முறைகேடாக சம்பாதித்ததால்தான் இவ்வளவு பணத்தை வைத்திருக்கிறார். அவரோட காசு ஒரு ரூபாய்கூட எனக்கு வேண்டாம். என் அம்மா சொத்தை விக்கறதை ஏத்துக்க முடியாது. இப்ப வேட்புமனுவைத் திரும்பப் பெறனும்னு மிரட்டறாங்க.
சோழா ஓட்டலும் எங்க அப்பாவோடதுதான். அப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனால ஏமாத்தி சொத்துப் பத்திரத்தில கையெழுத்து வாங்கிட்டார். இதைப் பத்திக் கேட்டாலே, 'கட்சியில் பெரிய ஆளாக இருக்கேன். இருக்கற இடம் தெரியாம ஆக்கிடுவேன்'னு மிரட்டறார். சொந்தக்காரங்களும், 'அவர் எம்.எல்.ஏ ஆகறது பிடிக்கலையா? வாபஸ் வாங்கு'ன்னு சொல்றாங்க.
என் வீட்டுக்காரர் உடம்பு முடியாம படுத்தபடுக்கையாக இருக்கார். இவ்வளவு கஷ்டப்படறோம். உதவிக்கு யாரும் இல்லை. என்னை மத்த கட்சிக்காரங்க தூண்டிவிடறாங்கன்னு பேசறார். எனக்குப் பின்னால யாரும் இல்லை. நான் தனி மனுஷிதான். அ.தி.மு.கவிலதான் இருக்கேன். அ.தி.மு.கவுக்கு மட்டும்தான் இதுநாள் வரையிலும் ஓட்டுப்போட்டு இருக்கேன். அவரைப் பத்தி அம்மா கவனத்திற்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்.
200 கோடிக்கும் மேல அவருக்கு சொத்து இருக்கு. இதெல்லாம் அவர் நியாயமாக சம்பாதித்த சொத்து கிடையாது. தேர்தலில் வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. எங்க அண்ணனால ரொம்பவே பாதிக்கப்பட்டேன். இதைவிட்டா எங்க அண்ணனை எதிர்த்து நிற்க எனக்கு வேற வழியில்லை.
கூடப் பிறந்த தங்கச்சியையே ஏமாத்தறவர், தொகுதி மக்களை எப்படியெல்லாம் ஏமாத்துவார். நான் ஜெயிக்கணும்னு போட்டியிடலை. ஆனா எங்க அண்ணன் தோக்கணும், என்று கூறியுள்ளார் பிரபாவதி.
சிங்கநல்லூர் அதிமுக வேட்பாளர், சிங்கைமுத்து, இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கும் எனக்கும் இருபது வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை. எந்தத் தொடர்பும் இல்லை. திடீர்னு ஏன் இப்படிக் கிளம்பறார்னும் தெரியலை. நான் ரொம்ப நாகரிகமானவன். இப்படிப் போட்டியிடுவதால அவருக்கு எந்த லாபமும் இல்லை. யார் தூண்டுதலில் இப்படி பண்றாங்கன்னு தெரியலை. கொடுக்க வேண்டிய சொத்துக்களைக் கொடுத்து கையெழுத்தும் வாங்கிவிட்டேன். இப்போது அநியாயமாக பழிவாங்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார். சொத்துகளுக்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் சரியாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.