மக்கள் நலன் கூட்டு இயக்கம் சார்பில் 5 நகரங்களில் ஆகஸ்ட் 13ல் அறப்போரட்டம் - வைகோ அறிவிப்பு
சென்னை: மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற உள்ளது என்றும், இதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"இந்தியாவை ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசும் ஜனநாயக உரிமைகளை நசுக்க முற்பட்டு ஏவிவிடுகிற மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய ஐந்து இயக்கங்களின் கூட்டமைப்பான மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் மிகப்பெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற உள்ளது.
இந்த அறப்போரில் வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகிய ஐவரும் சென்னை மாநகரில் நடைபெறும் அறப்போரில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஐந்து இயக்கங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஐந்து மையங்களிலும் அறப்போர் ஆர்ப்பாட்டம் மகத்தான வெற்றி பெறும் விதத்தில் முன்னேற்பாடுகளை திட்டமிட்டுச் செய்ய வேண்டுகிறோம்.
மத்திய அரசின் நில அபகரிப்பு திட்டத்தை முறியடித்தல், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நிறைவேற்றச் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை தாங்கியும், தங்கள் இயக்கக் கொடிகளை ஏந்தியும் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் எழுப்பும் முழக்கங்கள் விண்முட்ட ஒலிக்க வேண்டும். மக்கள் சக்தியின் வலிமையை மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு ஆகஸ்ட் 13 அறப்போர் உணர்த்திடும் விதத்தில் அறப்போரை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.