கர்நாடக வங்கிக்குள் உருட்டுக்கட்டையை வீசிய 2 பேர் கைது... தூத்துக்குடியில்
நெல்லை: தமிழர்கள் மீது கர்நாடகாவில் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. கர்நாடகா சம்பவத்திற்கு தமிழகத்திலும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னையில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகா வங்கி, ஏடிஎம்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஐஜி தினகரன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடியில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதிரடி படையினர் மற்று்ம் மணிமுத்தாறு சிறப்பு காவல் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நெலலையில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை செயலர் இந்திரா தலைமையில் கட்சியினர் பேட்டையில் வைத்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள பேங்க் ஆப் மைசூர், பேங்க் ஆப் கர்நாடகா ஆகிய வங்கிகளுக்கும், ஏடிஎம்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் லாரி ஷெட்டுகள், ஷிப்பிங் நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி இ.வி ரோட்டில் உள்ள வங்கியில் உருட்டுக்கட்டையை வீசிய தமிழர் தேசீய இயக்கத்தை சார்ந்த ரமேஷ் கிருஷ்ணன், விவேக் என்ற விவேகானந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.