தேமுதிக, தமாகா தனித்தே போட்டியிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் ம.ந.கூ தொடரும்: திருமாவளவன்
சென்னை: தேமுதிக, தமாகா தனித்து போட்டியிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தொடரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு 10-வது ஆண்டாக விருது வழங்கும் விழா காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது, முனைவர் வசந்திதேவிக்கு ‘பெரியார் ஒளி', பத்திரிகையாளர் ஞாநிக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்', மறைந்த அரசியல் தலைவர் இளையபெருமாளுக்கு ‘காமராஜர் கதிர்', மறைந்த பாடகர் ஹனீபாவுக்கு ‘காயிதே மில்லத் பிறை', கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ‘செம்மொழி ஞாயிறு' விருதுகள் வழங்கப்பட்டன.
விருது மற்றும் ரூ. 50 ஆயிரம் பணமுடிப்பு ஆகியவற்றை திருமாவளவன் வழங்கி பேசியதாவது:
கடந்த ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் தான் மாற்று அரசியலுக்கான அச்சாரத்தைப் போட்டோம். விளிம்புநிலை மக்களுக்கும் ஆட்சியதிகாரத்தில் பங்கு வேண்டும்; அதற்கு கூட்டணி ஆட்சி முறை இங்கு மலர்ந்தாக வேண்டும் என்கிற அரசியலை முன் மொழிந்தோம். இதுவே பின்னர், மக்கள் நலக்கூட்டணி அமைவதற்கு அடிப்படையாக அமைந்தது.
சோர்வு தேவையில்லை..
அந்த அரசியலை மக்கள் புறந்தள்ளிவிட்டார்கள் என்று சட்டசபை தேர்தல் முடிவுகளிலிருந்து நாம் சோர்வடையத் தேவையில்லை. அந்த மாற்று அரசியலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
உறவில் பாதிப்பு இல்லை
த.மா.கா.வைப் போல தே.மு.தி.க.வும் உள்ளாட்சித் தேர்தலைத் தனித்துச் சந்தித்தாலும் நமக்கிடையிலான உறவு பாதிக்காது. லோக்சபா தேர்தலிலும் இது பிரதிபலிக்காது.
மாற்று அரசியலே இலக்கு
சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகளை அரவணைத்துக் கொள்ளத் தவறியது என்று நாங்கள் மாற்று முகாமைத் தேடவில்லை; மாற்று அரசியலைத் தான் தேடினோம். மக்கள் நலன்களை மட்டுமே குறியாகக் கொண்டு முடிவெடுத்தோம்.
மக்கள் நலக்கூட்டணியை முன்னெடுத்துச் செல்வோம். உள்ளாட்சித் தேர்தலையும் இணைந்தே சந்திப்போம். எங்களின் இந்த முயற்சிக்கு விருது பெற்றுள்ள சான்றோர் ஆதரவளித்திட வேண்டுகிறேன். தலித் அல்லாத ஜனநாயக சக்திகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தான் ஆண்டுதோறும் இந்த விழாவை நடத்துகிறோம்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இருளர் சமூகத்துக்கு...
நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சந்துரு, என்னுடைய வாழ்நாளில் நான் யாரிடமும் விருது பெற்றது கிடையாது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் அளிக்கும் விருதை பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த விருதுடன் எனக்கு அளிக்கப்பட்ட ரூ.50 ஆயிரத்தை இருளர் சமூகத்தினருக்கு அங்கன்வாடி அமைப்பதற்காக அளிக்கிறேன். எங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறித்து முகநூலில் கருத்து தெரிவித்த ஒருவர், கூவியதற்காக விருதா என்று கேட்டாராம். திருமாவுக்காக நாங்கள் எவ்வளவு கூவவும் பெருமைப்படுகிறோம் என்றார்.