ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்களே... 21க்குப் பதில் 22ம் தேதி வருகிறார் ஜெ... உங்களைச் சந்திக்க!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா வரும் 22ம்தேதி திங்கள்கிழமையன்று தொகுதிவாசிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். ஒரு நாள் மட்டும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர் திருவெற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் சந்திப்பு ஆகிய இரு இடங்களில் பேசுவார் என அஇஅதிமுக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரனும் சுயேச்சைகள் 26 பேரும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் ஜெயலலிதாவிற்காக அனைத்து அமைச்சர்களும் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டள்ளனர். அவர்கள் வீடுவீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா வரும் 22ம் தேதி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடங்கள்
எம்.ஜி.ஆர் சிலை பெட்ரோல் பங்க் அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவெற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு ஜங்சன், அருணாச்சலேஸ்வரர் கோவில் தெருவழியாக பிரச்சாரம் செய்கிறார். திருவெற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு அருகே ஜெயலலிதா மக்களிடையே பேசுகிறார்.
தொடர்ந்து அவர், வைத்தியநாதன் சாலை, வைத்தியநாதன் பாலம் வழியாக வந்து, எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் பேசுகிறார். மேலும் எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை எழில்நகரில் பிரச்சாரம் செய்வார் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ம் தேதி ஜெ. பிரசாரம் செய்வார் என முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது பிரச்சார பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.