அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர்...திமுகவின் வெற்றி உறுதி என மருதுகணேஷ் தகவல்!
ஆர்.கே நகர் தொகுதி மக்கள் அதிமுகவின் மீது கடும் கோபத்தில் இருப்பதால் திமுகவின் வெற்றி உறுதி என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அதிமுக அரசின் மீது கடுமையான கோபத்தில் இருப்பதால் திமுகவின் வெற்றி உறுதி என்று திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருதுகணேஷ் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளராக மீண்டும் மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் மருதுகணேஷ் தான் திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞர், தினகரன் நாளிதழின் பகுதி நேர நிருபராக பணியாற்றி வந்த மருதுகணேஷின் குடும்பம் பாரம்பரியம் பாரம்பரியமாக திமுகவைச் சேர்ந்தவர்கள்.
திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினின் தீவிர விசுவாசி என்ற அடிப்படையில் மருதுகணேஷ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியினர் ஏற்கனவே சொல்லி வந்தனர். இந்நிலையில் மீண்டும் மருதுகணேஷ் இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மருதுகணேஷ் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் : ஆர். கே.நகர் தொகுதி மக்கள் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். திமுக நிச்சயம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஏற்கனவே அதே தொகுதியில் இருப்பதால், தேர்தலுக்கென்று இல்லாமல் மக்கள் பணியாற்றி வருகிறேன்.
தலைமைக் கழக யுக்திகளை கேட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பு மனு தாக்கல் எப்போது என்று கட்சியின் தலைமைக் கழக அறிவிப்பை கேட்டு அதன்படி நடைபெறுவேன் என்று மருதுகணேஷ் கூறியுள்ளார்.