ஒ ரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம் என்ற உத்தரவை திரும்ப பெறுக - இரா.முத்தரசன்
வாகனங்கள் ஓட்டும் அனைவரும் ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் , வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன்
சென்னை: செப்டம்பர் 1ஆம் தேதி முதல், தமிழகத்தில், வாகனங்கள் ஓட்டும் அனைவரும் ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் , வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை!
வாகன ஓட்டுநர் அனைவரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ 500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவு நடைமுறை சாத்தியமற்றது. இது காவல்துறையின் அத்துமீறலுக்கும் ஊழல், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும் தனியாரிடம் வாகனம் ஓட்டுபவர்கள் தங்களின் அசல் ஓட்டுநர் உரிமம், பள்ளிச்சான்றிதழ் போன்ற அசல் ஆவணங்களை வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டுதான் பணி செய்து வருகிறார்கள்.
ஆவணங்கள் தொலையும் அபாயம்
இவர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை உரிமையாளரிடம் கேட்டால் வேலையிழந்து வீதியில் நிற்கும் அவலநிலை ஏற்படும். வாகன ஓட்டுநர்கள் நடைமுறையில் சந்திக்கும் இந்த இடர்பாட்டிற்கு என்ன தீர்வு? மேலும் செல்லும் இடமெல்லாம் அசல் ஆவணங்களை எடுத்துச் செல்லும் போது அவைகள் தவறிவிடும் அபாயம் உள்ளது.
மாற்று ஓட்டுநர் உரிமம் சுலபமல்ல
இதுபோன்ற நேர்வுகளில் மாற்று ஓட்டுநர் உரிமம் பெறுவது சுலபமல்ல. கடுமையான நிபந்தனைகள் உள்ளன. நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நெருக்கடியும் உள்ளது.
சாலை விபத்துக்கு வேறு காரணம்
எதிரில் வரும் வாகனத்தில் அதீத வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளின் ஒளிவீச்சாலும் அதிவேக வாகனங்களுக்கு தக்கபடியான சாலைவசதிகள் இல்லாததும் சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அடிமரத்தை வெட்டும் செயல்
வாகன உற்பத்தி நிலையிலேயே விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அசல் ஓட்டுநர் உரிமத்தை மட்டும் வலியுறுத்துவது "மரக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டும்" செயலாகும்.
உத்தரவை வாபஸ் பெறுங்கள்
எனவே தமிழ்நாடு அரசு அசல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான தனது உத்தரவைத் திரும்பப் பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.