3.5 அடி மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு: ஆர்.எஸ்.பாரதி வீட்டின் படிக்கட்டு இடிப்பு!
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 160வது வட்டத்தில் உள்ள ஜால் தெருவில், மாநகராட்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே முன்னாள் நகரமன்ற தலைவரும், தி.மு.க. சட்டத்துறை செயலாளருமான ஆர்.எஸ்.பாரதியின் பூர்வீக வீடு உள்ளது.
மாநகராட்சி பள்ளி இடத்தை ஆக்கிரமித்து இந்த வீட்டின் பின்புற வாசல்படி அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக களஆய்வு செய்யும்படி மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.
அதன்படி ஆலந்தூர் தாலுகா தனி தாசில்தார் அந்த பகுதியை களஆய்வு செய்ததில், ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி மூன்றரை அடி நீளம், 2 அடி அகலத்துக்கு தனது வீட்டு வாசல்படியை மாநகராட்சி பள்ளியை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மாநகராட்சி நிலத்தில் உள்ள இந்த ஆக்கிரமிப்பு படிக்கட்டுகள் உடனடியாக அகற்றப்படும் என மேயர் சைதை துரைசாமி கூறி இருந்தார். அதன்படி, ஆலந்தூர் மண்டல செயற்பொறியாளர் முரளி தலைமையில், மண்டல உதவி ஆணையர் மகேசன், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதவி பொறியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த ஆர்.எஸ்.பாரதி வீட்டின் பின்புற வாசல் படிக்கட்டுகளை சிறிய பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். பின்னர் வாசல் இருந்த பகுதியை தடுப்பு பலகையை கொண்டு மூடி பாதையை அடைத்தனர்.
ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி மூன்றரை அடி நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியிருப்பது தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.