ஸ்டாலினை தனிமையில் சந்தித்து வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி.. காரணம் என்ன?
நீண்ட காலமாக கருணாநிதியை தான் சந்திக்காமல் இருந்ததற்காக ஸ்டாலின் கையை பிடித்தபடி வருத்தம் தெரிவித்தாராம் ராகுல் காந்தி.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நீண்ட காலங்களாக சந்திக்காமல் இருந்ததற்காக அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வருத்தம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல் காந்தி.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதித்து உடல்நிலை சீரான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி வருகை
இந்நிலையில், 17ம் தேதி ராகுல் காந்தி, சென்னைக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியை நேரில் சந்தித்து அவருக்கு ஹலோ சொன்னார். இதன்பிறகு, மருத்துவமனையிலேயே ஓர் அறையில், திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார் ராகுல் காந்தி.
ஸாரி கேட்ட ராகுல்
அப்போது, இதற்கு முன்பு நீண்ட காலமாக கருணாநிதியை தான் சந்திக்காமல் இருந்ததற்காக ஸ்டாலின் கையை பிடித்தபடி வருத்தம் தெரிவித்தாராம் ராகுல் காந்தி.
விளக்கம் கொடுத்தார்
தான் சந்திக்காமல் சென்றது அரசியல் நோக்கத்தோடு கிடையாது என்றும், அவர் ஒரு மூத்த தலைவர் என்பதால், தனது தாய் சோனியா காந்தி போன்றவர்கள், அவரோடு உரையாடுவதுதான் மரியாதை என நினைத்து தான் சந்தித்து உரையாடாமல் இருந்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மனம் திறந்த ராகுல் காந்தி
கருணாநிதி உடல் நிலை இவ்வளவு மோசமாக இருந்தது தனக்கு தெரியாது என்றும், அப்படி தெரிந்திருந்தால், ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ சென்ற தினத்தன்று, கோபாலபுரம் சென்று கருணாநிதியையும் சந்தித்திருப்பேன் என மனம் திறந்துள்ளார் ராகுல் காந்தி என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.