தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கிய அரை மணிக்குள் தென்மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்!
அக்டோபர் 18-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
சென்னை : தீபாவளிக்கான சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியதால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தென்மாவட்ட ரயில்களில் 30 நிமிடங்களில் முன்பதிவு முடிந்தது.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அதன்படி அக்.16-ஆம் தேதி தீபாவளிக்கு முன்னதாக பயணம் செய்ய விரும்புவோரும், தீபாவளி பண்டிகையான அக்.18-ஆம் தேதி வெளியூர் செல்ல பயணம் செய்வோரும் முன்பதிவு செய்யலாம். தென்மாவட்ட ரயில்களான பாண்டியன், நெல்லை, முத்துநகர், குமரி ஆகிய ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் முடிந்தது.
சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அதேபோல, தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள். தங்களின் உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்கு செல்கிறார்களோ இல்லையோ, நிச்சயமாக ஆண்டுதோறும் தீபாவளிக்கும், பொங்கல் பண்டிகைக்கும் ஊருக்கு போயே ஆவார்கள்.
அவர்களுக்காக தென்னக ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.












Click it and Unblock the Notifications