நெருங்கும் தீபாவளி... பட்டாசுகளுக்கு ‘வெடி’ வைக்குமா மழை, வெள்ளம்?... பீதியில் மக்கள்!
சென்னை: இன்னும் சில வாரங்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. ஆனால், வடகிழக்கு பருவமழை பீதி மக்களின் கொண்டாட்ட மனநிலையை கெடுத்து வருகிறது.
கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக கனமழையும், பெரு வெள்ளமும் சேர்ந்து விட, மக்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தார்கள். இதனால் மழை என்றாலே மக்களின் அடி மனதில் சின்ன பயம் வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

நெருங்கும் தீபாவளி...
இந்த சூழ்நிலையில் இம்மாதம் 30ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. ஆனால், அதற்கு முன்கூட்டியே 20ம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மழை, வெள்ளம் போன்ற பயத்தால் தீபாவளிக் கொண்டாட்டத்தை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர்.

வெள்ள பீதி...
முன்பெல்லாம் மழை வந்தால் பட்டாசு வெடிக்க முடியாது என்ற கவலை மட்டும் தான் இருந்தது. ஆனால், இப்போதோ எப்போது வெள்ளம் வருமோ என்ற பீதியும் மக்களை சூழ்ந்துள்ளது மறுக்க இயலாத உண்மை.

தீயாய் வேலை செய்யும் மக்கள்...
கடந்தாண்டு வெள்ளம் வராத பகுதிகளுக்கு வீடுகளை மாற்றிச் செல்வதிலும், வீட்டின் மேற்பகுதியில் உயரமாக கட்டிடம் எழுப்புவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெடி வைக்கும் வதந்திகள்...
இது ஒருபுறம் இருக்க கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் வெள்ளம் வரும் என சமூகவலைதளங்களில் பலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மழை வெடி வைத்து விடுமோ என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications