மழை வெள்ளம்: வீட்டு சமையலுக்கு லீவு... ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதல்
சென்னை: விடாமல் பெய்யும் கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகள் தண்ணீரில் மிதப்பதாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் சமையல் செய்ய முடியாமல் ஹோட்டல்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான ஹோட்டல்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பார்சல் சாப்பாடுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்து விட்டது. வெள்ளநீர் இதனால் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 130 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ வெங்காயம் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலைவாசி ஒருபக்கம் மிரட்டல் விடுக்க, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொள்ள தடுமாறித்தான் போனார்கள் இல்லத்தரசிகள். மழைதான் லீவ் விடலை... சமையலுக்கு லீவு விடுவோம் என்று இல்லத்தரசிகள் ஓய்வு எடுக்க ஏராளமானோர் ஹோட்டல் உணவுக்கு ஆர்டர் செய்தனர்.

பெரும்பாலோனோர் அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு படையெடுக்கவே கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் தக்காளி சாதம், காய்கறி பிரியாணி, சாப்பாடு என ஆள் ஆளுக்கு ஆர்டர் செய்தனர். ஒரு கட்டத்தில் அசந்து போன ஹோட்டல் ஊழியர்கள் பார்சல் சாப்பாடு கிடையாது என்று கூறி கையை விரித்து விட்டனர். புரோட்டா மட்டுமே பார்சல் கிடைக்கும். ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே மீல்ஸ் கிடைக்கும் என்று கூறிவிட்டனர். இதனால் பார்சல் வாங்கச் சென்ற பெரும்பாலோனோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். சிலரோ வந்ததற்கு புரோட்டா மட்டுமாவது கிடைத்ததே என்று பரிதாபமாக பார்சல் வாங்கிச் சென்றனர்.
விடாது கொட்டும் கனமழையால் கையேந்திபவன்கள், நடைபாதைகளில் வைக்கப்பட்டிருக்கும் சிறுசிறு ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன. பெரிய உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதுகிறது. கனமழையால் வீட்டில் சமையல் செய்யமுடியாத நிலை ஒருபுறம் இருக்க ஹோட்டல் சாப்பாடு கூட கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications