இறங்கி அடிக்கும் “எல் நினோ”- சம்மரில் மழைக்கு வாய்ப்பே இல்லையாம்; வெயில் வெளுக்குமாம்!
திருப்பூர்: தமிழகத்தில் கோடை கால மழையின் அளவு மிகவும் குறைவாக இருக்கும் என்றும், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட பகுதிகளில் குளிர்காலமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சராசரியாக 9.02 மி.மீ மழை பெய்யவேண்டும்.
ஆனால், சென்னையில் பெய்த அளவிற்கு இவ்வாண்டு மற்ற இடங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மழை பெய்யவில்லை.
ரொம்பவே குறையும்:
இதுபோலவே, கோடை காலத்திலும் மழையின் அளவு குறையும் என வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான கோடை கால மழையளவு சராசரி, 124.20 மி.மீ இருக்கவேண்டும்.
அதிகரிக்கும் வெயில்:
ஆனால், இந்தாண்டு 80 முதல் 100 மி.மீ வரை மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரிப்பதோடு காற்றின் வேகமும் கூடுதலாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
கடுமையான வெப்பம்:
மேலும், இயல்பை விட அதிகரித்து வெயில் இந்தாண்டு கடுமையாக இருக்கும். பகலில் 33 முதல் 34 டிகிரி சென்டி கிரேடு வரை வெயில் பதிவாகும். இரவு நேரத்தில் 23 முதல், 24 டிகிரி சென்டி கிரேடு வெப்ப நிலை இருக்கும்.
குளிர்ந்த நீர் கொடுங்கள்:
காற்றின் வேகமும் மணிக்கு 4 கி.மீ வேகம் என்பதற்கு பதிலாக கோடையின் தாக்கத்தால் மணிக்கு 7 முதல் 8 கி.மீ தூரம் என்ற அளவில் இருக்கும். கால்நடைகளுக்கு நீர் அதிகம் தேவைப்படும். சூடான நீர் வைக்காமல் குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.