முன்னாள், இன்னாள் முதல்வரை மிரட்டிய மழை... துணை முதல்வர் வீட்டையும் விடவில்லை
வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு அரசியல்வாதிகளையும் மிரட்டி விட்டது. திரும்பிய பக்கமெங்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
Recommended Video
சென்னை: விடிய விடிய விடாமல் கொட்டிய மழை இந்த ஆண்டு முன்னாள், இந்நாள் முதல்வர் வீடுகளையும் விடவில்லை. இதேபோல துணை முதல்வர் வீட்டையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
சென்னையில் நேற்று பகலில் வெயிலடித்த நிலையில், பிற்பகலில் மழை லேசாக துவங்கியது. நேரம் செல்லச் செல்ல தீவிரமடைந்தது மழை. 10 மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது.
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பல வெள்ளக்காடாகியுள்ளன. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது ஏழைகளும், சாமானிய மக்களும்தான். புறநகர், நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஒருவார காலம் இயல்புநிலை முற்றிலும் முடங்கியது. இந்த ஆண்டு மழை வெள்ளம் ஏழை, சாமானிய மக்களை மட்டுமல்ல அரசியல்வாதிகளையும் மிரட்டிவிட்டது.
கருணாநிதி வீட்டில் வெள்ளம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்ந்து வரும் கோபாலபுரம் வீட்டு வாசலை எட்டிப்பார்த்தது வெள்ளம். அது எளிதில் வடிந்து விடும் பகுதி என்பதால் வெள்ளநீர் வழிந்தோடி விட்டது.
எடப்பாடி பழனிச்சாமி
அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசித்து வரும் கிரீன்வேஸ் சாலையில் வெள்ளநீர் ஆறாக கரைபுரண்டு ஓடியது. வெள்ளநீரில் வேகத்தை முதல்வரினால் கூட சமாளிக்க முடியவில்லை.
ஓபிஎஸ் வீட்டை சூழ்ந்த வெள்ளம்
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் தண்ணீர் புகுந்தது. தரை தளத்தை மூழ்கடித்த மழைநீரை மின்மோட்டாரை கொண்டு வெளியேற்றினர்.
தலைமை செயலகமும் பாதிப்பு
மயிலாப்பூர், மெரீனா கடற்கரை, கலங்கரை விளக்கம் பகுதிகளில் கொட்டித் தீர்த்த 30 செமீ மழையால் காணும் இடமெங்கும் வெள்ளம் சூழ்ந்தது. நவம்பர் 1ஆம் தேதி இரவு பலருக்கும் தூக்கம் தொலைந்த இரவாக மாறியது. இடியோடு கொட்டிய மழையால் கடற்கரை சாலை மூழ்கியது. தலைமை செயலகம், மாநகராட்சி அலுவலகத்தையும் வெள்ளம் மிரட்டி பார்த்தது.
எந்த பேதமுமில்லை
மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடருக்கு ஏழை, பணக்காரன் என்ற பேதமோ, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என்ற பாகுபாடோ எதுவுமில்லை என்பதை இந்த பெருமழை உணர்த்திவிட்டது.