பருவ மழை தீவிரம் – நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சேர்வலாறு, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் ஓரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. பாபாநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன் 1ம்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்தாண்டு பருவமழை போதிய அளவு இல்லாவிட்டாலும் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 79.07 அடியாக உள்ளது. அணை பகுதியில் 15 மிமீ மழை பதிவாகியுள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 61.68 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் சுமார் 40 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்முதல் 72 அடியாகும்.
கொடுமுடியாறு அணை 40 அடியில் இருந்து 44.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைப்பகுதியில் சுமார் 15 மிமீ மழை பதிவாகியுள்ளது. இன்னும் 8 அடி உயர்ந்தால் அணை நிரம்பி விடும் என கூறப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.10 அடியில் இருந்து 71.05 அடியாக உயர்ந்துள்ளது. அணைப்பகுதியில் சுமார் 44 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83 அடியில் இருந்து 84.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைப்பகுதியில் சுமார்1.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. ராமநதி அணையில் நீர்மட்டம் 48 அடியில் இருந்து 50 அடியாக உயர்ந்துள்ளது.
அணைப்பகுதியில் சுமார் 10 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடவிநயினார் அணையில் 13 மிமீ, குண்டாறு அணையில் 22 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.