இன்னும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் ... மீனவர்களே கவனம் ... வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலைக்கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை பெய்யும் என்றும், இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னையில் அவ்வப்போது மழையும், கொஞ்சம் வெயிலுமாக வானிலை மாறி மாறிக் காணப்படுகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த அந்த மேலடுக்கு சுழற்சி, அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அனேக இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சியினால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., தூத்துக்குடி 9 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் 7 செ.மீ., இரணியல், குழித்துறை, தக்கலை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தலா 6 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, நாங்குநேரி, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் அணைக்காரச்சத்திரம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
காற்று 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசுவதால் தென் தமிழகம், கேரளாவை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் இருந்தும் கூட:
அரபிக்கடல் பகுதியில் உருவான சபாலா என்ற புயல், நேற்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி, ஓமன் நாட்டில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பையில் இருந்து 1,560 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தற்போது இந்த புயல் வலு குறைந்து வருகிறது. இந்த புயலினால் அரபு நாடுகளுக்கு மட்டும் தான் மழை கிடைக்கும். தமிழகத்துக்கு எந்தவித பயனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை:
கடந்த 2 தினங்களாக பெய்த பலத்த மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படியே சென்றன. சாலையில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

சிறுவன் பலி:
சென்னை வேளச்சேரி-தரமணி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள குட்டையில் மழைநீர் தேங்கியிருந்தது. இதில் வேளச்சேரியை சேர்ந்த லோகேஷ் (16), தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

கட்டிட தொழிலாளி காயம்:
திருமுல்லைவாயல் சண்முகாபுரத்தை சேர்ந்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வள்ளி(42) மணிகண்டபுரம் என்ற இடத்தில் 5 அடி உயரத்தில் உள்ள சாரத்தில் நின்று கொண்டு கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது மழை காரணமாக, சாரத்தின் கம்பு வழுக்கியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குளத்தின் சுவர் இடிந்தது:
மழையால் நாகை தாமரை குளத்தை சுற்றி சுமார் 15 அடி உயரத்தில் புதிதாக எழுப்பப்பட்டிருந்த சுற்றுச்சுவரின் வடக்கு பகுதியில் சுமார் 80 அடி நீளத்திற்கு சுவர் திடீரென உடைந்து குளத்தில் விழுந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் அதிகாரிகளுடன் சென்று தாமரைகுளத்திற்கு சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications